Ad Widget

கிளிநொச்சியை சிறந்த நகரமாக மாற்றுவதற்கு இராணுவம் தடையாகவுள்ளது: சிறிதரன்

கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கடுமையான குற்றச் சாட்டை சுமத்தினார்.

“கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருக்கின்ற இராணுவ நினைவுச் சின்னம் யாருக்காக இருக்கிறது? டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டன? எங்கிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன?

2009 இற்கு முன் நாங்கள் இடம்பெயர்ந்து சென்ற போது அந்த இடத்தில் அப்படி எதுவும் இல்லையே இது யாருடைய கலாசாரம் என்பதை காட்டுவதற்க யார் எடுக்கிற முயற்சி இதற்கு நகர அவிருத்தி அதிகார சபையும் இதற்கு உடந்தையாக இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை விடுகிறார்கள் இல்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி டிப்போச் சந்தி இராணுவ நினைவுச் சின்னம் நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என்பதால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவோம் எனத் தெரிவித்தார். எனவே இக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

Related Posts