Ad Widget

கிளிநொச்சியில் 3 வயது சிறுமி பாலியல் வன்புணர்வின் பின்னரே கொல்லப்பட்டார்!

காணாமல் போய் பின் 28 நாட்களின் பின்னர் உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட 3 வயதான ஜெர்சிகா பாலியல் வன்புணர்வுக்குப் பின்னரே கொல்லப்பட்டார் என கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் ஜெர்சிகா என்ற இச்சிறுமி கடந்த ஜூன் 21 ஆம் திகதி நீர் நீர் வாய்க்காலுக்குக் குளிப்பதற்காக சென்ற போது காணாமல் போயிருந்தார்.

இவரது ஒன்று விட்ட சகோதரனான 14 வயது சிறுவன் சைக்கிளில் சிறுமியை ஏற்றிச் செல்ல, சிறுமியின் பெற்றோர் நடந்து சென்றிருந்தனர்.

இச்சமயத்தில் சிறுவன் சிறுமியை குளிக்கும் வாய்க்காலுக்கு அருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார் எனக் கூறப்பபடுகின்றது.

ஆனால் பெற்றோர் அங்கு சென்றபோது சிறுமியைக் காணவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுமி காணாமல்போன 28 நாட்களின் பின் கடந்த 19 ஆம் திகதி 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வயல் ஒன்றில் இருந்து உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் சடலப் பரிசோதனையில் சிறுமி பலியல் வன்புணர்வின் பின்னரே கொல்லப்பட்டார் என கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிறுமியை குளிக்கும் இடத்துக்கு சைக்கிளில் ஏற்றிச்சென்ற சிறுவனைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றின் அனுமதியுடன் விசாரித்து வந்தனர்.

சிறுவனை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தும் அதேவேளை வைத்தியசாலை அறிக்கையும் பாரப்படுத்துவர்.

Related Posts