கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான அடிக்கல்லை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (24.11.2015) நாட்டி வைத்துள்ளார்.
விதைப்புச் செய்யவேண்டிய விதைகளுடன் முளைதிறனற்ற விதைகள், வேறு பயிரினங்களின் விதைகள், களை விதைகள் போன்றவையும் கலந்திருப்பதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே, தேவையற்ற விதைகளைப் பிரித்தெடுத்துத் தூய தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 18.6 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்படும் இந்நிலையம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. கட்டுமாணப்பணிகள் யாவும் நான்கு மாதங்களில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சி. சிவராஜா தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பிரதி விவசாயப் பணிப்பாளர் அ. செல்வராஜா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு. அருந்தவநாதன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் த. தனகுமார், உணவு விவசாய நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ச.பார்த்திபன் ஆகியோரும் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.