Ad Widget

கிளிநொச்சியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மழையினால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

kili-student

பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவதனால் மாணவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2286 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றுகின்றனர். அத்துடன் 10 பரீட்சை இணைப்பு அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், நனைந்தவாறு பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதேவேளை பூநகரி கல்விக்கோட்டத்தின் முழங்காவில் மற்றும் ஜெயபுரம் பிரதேசங்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் மாங்குளம் மல்லாவி வெள்ளாங்குளம் ஊடாக நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் சுற்றியே எடுத்துச் செல்லப்படுகிறது. பூநகரி மன்னார் ஏ 35 வீதியில் மண்டக்கல்லாறு பெருக்கெடுத்து பாய்வதனாலும், முறிகண்டி முழங்காவில் வீதியில் அக்கராயன் பகுதியில் வீதியின் குறுக்கே வெள்ளம் பாய்வதனாலும் குறித்த மாற்று வழியை பயன்படுத்துகின்றனர்.

நேற்று காலை முதல் பெரும்பாலான பரீட்சை நிலையங்களுக்கு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு, இருளான பரீட்சை நிலையங்களின் நிலைமைகளை தவிர்க்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

Related Posts