Ad Widget

கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் – சந்தேக நபர்

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக அவருடன் சம்பவ இடத்தில் நின்ற இளைஞன் அரச சாட்சியாக மாறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“எனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தான் வளர்ப்பதற்குத் தருமாறு மனைவியிடம் நிர்வாக கிராம அலுவலகர் கேட்டு வந்துள்ளார். அதுதொடர்பில் எனக்கு எழுந்த சந்தேகம் அவரைக் கொலை செய்யுமளவுக்குத் தூண்டியது” என்று சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகராகக் கடமையாற்றும்
விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

அவர் கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார். அதன்பின்னர் ஆத்திமோட்டை – கள்ளியடியில் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார்.

அவர் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் நிர்வாக கிராம அலுவலகரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியமையால் அவர் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இலுப்பக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கணவர் அரிசி ஆலை ஒன்றை அமைப்பதற்காக பெண் கிராம அலுவலகர், நிர்வாக கிராம அலுவலகரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கைமாற்றாக வாங்கியுள்ளார்.

அரிசி ஆலையில் வேலைக்கு என இளைஞர் ஒருவரை சந்தேக நபர் அழைத்து வந்து வைத்திருந்துள்ளார்.

சம்பவ தினைத்தன்று கிராம அலுவலகர் இளைஞனையும் அழைத்துக் கொண்டு சென்றுதான் நிர்வாக கிராம அலுவலகரை சந்தேக நபர் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

நிர்வாக கிராம அலுவலகரை அம்புலன்ஸ் வந்து ஏற்றிய போது முச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய சந்தேக நபர், நோட்டமிட்டுள்ளார். அங்கு கூடியிருந்தவர்கள் கிராம அலுவலகர் வெட்டப்பட்டுள்ளார் என்று தெரிவித்த போது, “இல்லை இல்லை அவருக்கு யாரோ கட்டையால் அடித்துள்ளனர்” என்று சந்தேக நபர் கூறியுள்ளார்.

மறுநாள் இலுப்பைக்கடவை இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்களை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதாக பாசாங்கு செய்துள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சந்தேக நபரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார், அவரது வீட்டில் வேலைக்காக தங்கியிருந்த இளைஞனை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அந்த இளைஞன் நடந்தவற்றை கூறியதால் பெண் கிராம அலுவலகரின் கணவரை கைது செய்தனர் பொலிஸார்.

கொலைக்குப் பயன்படுத்திய மண்வெட்டி பிடி மற்றும் உடை ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட குருதிக்கறையுடனான மரத்துண்டு மண்வெட்டிப்பிடியில் உடைந்த பகுதியோடு பொருந்தியுள்ளது.

இந்த நிலையில் முதலாவதாகக் கைது செய்யப்பட்ட இளைஞன் அரச சாட்சியாக மாறுவதற்கு சம்மதித்ததால் சந்தேக நபருக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேக நபர், சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெறப்பட்ட நிலையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சிறுவன் ஒருரவரைக் கைது செய்து பொலிஸார் சித்திரவதைக்கு உள்படுத்துகின்றனர் என்று சிறுவர் பாதுகாப்பு பிரிவு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்று அறிவித்து விசாரணைகளைத் தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts