வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கால்நடைகளைச் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டே மக்களை நோக்கி கால்நடை மருத்துவசேவைகளை எடுத்துச்செல்லும் விதமாக வடக்கு கால்நடை அமைச்சு தற்போது மாவட்டங்கள் தோறும் கால்நடை மருத்துவ நடமாடும் சேவையை ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே கிளிநொச்சியிலும் ஜெயபுரம், முழங்காவில் , அக்கராயன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் விதமாக இம்மருத்துவ சேவை இடம்பெற்றுள்ளது.
இந்நடமாடும் சேவையில் கால்நடைகளுக்கான மருத்துவ ஆலோசனை, நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், செயற்கை முறைச் சினையூட்டல், நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், பசுத்தீவனம் தயாரித்தல், கால்நடைகளுக்கான காப்புறுதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பசுக்களை வளர்ப்பவர்களுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து பாற் கொள்கலன்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் செ.கௌரிதிலகன் தலைமையில் நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கால்நடை வளர்ப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.