Ad Widget

காலை எட்டு மணியை கடந்தும் ஏ9 வீதியில் காத்திருக்கும் மாணவர்கள்!

பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது.

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற மாணவர்கள் காலைவேளையில் வீதிக்கு வருகின்ற போதும் பெரும்பாலான பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச்செல்வது இல்லை. இதனால் காலை எட்டு மணி கடந்தும் மாணவர்கள் வீதியில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. சிலவேளைகளில் எந்த பேருந்தும் அவர்களை ஏற்றிச்செல்லாத போது அம்மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் உள்ள பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பேருந்து ஏற்றிச்செல்லாத நிலையில் பாடசாலைக்கு புறப்பட்டுச் செல்லும் பிள்ளைகள் அடிக்கடி வீடுகளுக்கு திரும்பி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Related Posts