Ad Widget

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து உத்தரவிட்டார்.

அச்சுவேலி – பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், இடைக்காடு பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலை வெளிப்படுத்தியிருந்த போதும் குறித்த பெண் அதனை ஏற்கமறுத்துள்ளார். இவ்வாறு குறித்த இளைஞனின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததை தாங்க முடியாமல் அப்பெண் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஏற்கெனவே பலமுறை முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை (04) குறித்த இளைஞன், அப்பெண்ணின் வீட்டுக்குள் பெற்றோல் பரல், மிளகாய்தூள், மற்றும் கையுறையுடன் குறித்த பெண் தூங்கிகொண்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.

அதைப்பார்த்த பெண், அபாயக்குரல் எழுப்பியதையடுத்து, பெண்ணின் தந்தை குறித்த இளைஞனை மடக்கப்பிடித்து அறைக்குள் வைத்து கதவினை பூட்டிவிட்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் வருவதை உணர்ந்த இளைஞன் மேற்கூரையினை பிரித்து வெளியே தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து, தப்பிச் சென்ற இளைஞனை மடக்கப்பிடித்ததுடன், அவர் கொண்டுவந்த பொருட்களையும் மீட்டுள்ளனர்.

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்யும் நோக்குடனேயே குறித்த இளைஞன் வீட்டுக்குள் நுழைந்தமை பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

Related Posts