Ad Widget

காணி விடுவிப்பு இப்போது ஆரம்பமே! இனி அது தொடரும் என்கிறார் ஜனாதிபதி

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும். தமிழ் மக்களிடத்திலிருக்கும் பயம், பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்கவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை நாம் உணர்வோம். – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

maith-ranil-vick-chanthe

வயாவிளானில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் பொதுமக்களது காணிகள் சிலவற்றை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை முற்பகல் வயாவிளானில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

புதிய அரசாங்கம் என்ற வகையிலேயே நாங்கள் மக்களுடைய எல்லாப் பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்த்துவைத்துவருகிறோம். குறிப்பாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் முன்னுரிமைப்படுத்தி தீர்த்துவைக்க முற்பட்டுள்ளோம்.

இப்படியான வேலைகள் ஆரம்பிக்கப்படும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் எமது வேலைகளைத் தொடர்ந்தால்த்தான் அவற்றையும் நிவர்த்தி செய்து நிறைவேற்றமுடியும். மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காகவே நாங்கள் இந்த புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.

நாங்கள் உங்கள் பகுதிகளுக்கு வரும்போது இங்குள்ள குறைபாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் அரசியல் தலைவர்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திலும் உங்கள் பிரச்சினைகள் பற்றி அரசியல் தலைவர்கள் எடுத்துரைக்கிறார்கள். எனவே தமிழ் மக்களாகிய உங்களுக்கு பாரதூரமான பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் இதன் வாயிலாக அறிந்துவைத்துள்ளோம்.

நீங்கள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் எனக்கு வாக்களித்தீர்கள். எனவே நான் தெட்டத்தெளிவாக உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சிக்காலத்தின்போது தீர்வு காணுவோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்திலும் நாம் உங்கள் மத்தியில் மேடைகளில் பேசுவதற்காக வரமாட்டோம். பதிலாக கிராமங்கள்தோறும் சென்று உங்கள் பிரச்சினைகள் குறித்து உங்களிடமே நேரடியாகப் பேசி தீர்வு காண்பதே எமது அடுத்த நடவடிக்கைகளாக இருக்கும்.

புதிய அரசாங்கம் என்ற வகையிலேயே மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய பல திட்டங்களை நாம் முடுக்கிவைத்துள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே மிக மிக முக்கியமானது.

இதற்காக நாம் சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் நீக்கிவிடவேண்டும். தமிழ் மக்களது பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீர்வு வழங்குவதன் மூலம்தான் உங்களுடைய அந்த சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் செய்யமுடியும். நாம் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை கடந்த மாதம் உருவாக்கி செயற்படுத்தி வருகிறோம்.

இதில் முக்கியமான பணிகளை முன்னெடுத்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இருக்கிறார். உங்களது பிரச்சினைகளை நாங்கள் மிகவும் அவதானமாகச் செவிமடுத்துவருகிறோம். எனவே படிப்படியாக உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம்.

உங்களுடைய மனங்களில் இருக்கும் சந்தேகம், பயம், பீதி எல்லாவற்றையும் தீர்க்கக்கூடிய விதத்திலே நாம் உங்கள் பிரச்சினைகளை அவதானித்து வருகிறோம்.

இன்று இந்த நிகழ்வு என்பது எமது ஆரம்பமே தவிர இது ஒரு முடிவு என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இதனை முடிவுறுத்த எமக்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. இன்று நாங்கள் உங்கள் காணிகளை கையளிப்பது மட்டுமல்லாமல், இங்கே அழிந்துபோன கட்டுமானங்களை எல்லாம் மீளமைத்துத்தருவதும் எமது நோக்கமாகவுள்ளது.

இந்தப்பிரதேசத்துக்கு வந்து இந்தக் காணிகளைப் பார்த்தபோது எமது உள்ளத்திலே மிகவும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்தப்பகுதியை பார்த்தால் அது நன்றாகத் தெரியும்.

மாத்தளை,கண்டி, நுவரெலியா பிரதேசங்கள் போல அல்ல இந்த பிரதேசங்கள். இங்குள்ளவர்கள் குடிதண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் என்று நான் வடக்கு முதலமைச்சரிடம் கேட்டேன். அப்போதுதான் மக்கள் குடிதண்ணீருக்காக பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது.

காணிகளை விடுவிப்பது மட்டுமன்றி, உங்களுக்கு வாழக்கூய சூழலையும் சுற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போன்று நாங்களும் உங்கள் மீது கவனம் செலுத்துவோம். ஒரு பிள்ளை அழும்போது அது எதற்காக அழுகிறது என்று பார்க்கவேண்டும். அதேபோன்று வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வடபகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவிருக்கிறோம்.

அதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாம் ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். வடக்குமாகாண முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் நாம் பூரண வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

வடபகுதி மீனவர் பிரச்சினை பற்றியும் நாம் கருத்திலெடுத்துள்ளோம். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டத்தையும் நாம் ஆரப்பிப்போம். – என்றார்.

தொடர்புடைய செய்தி

காணி கையளிப்பு : ஜனாதிபதி, பிரதமர், சந்திரிகா பங்கேற்பு!

Related Posts