Ad Widget

காணாமல் போன அடையாள அட்டைக்கு பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு தவறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை காணாமல் போனவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் அறிக்கையைப் பெற வேண்டும். மேலும் அடையாள அட்டைகள் காணாமல் போன நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு அடையாள அட்டைகள் கிடைக்காவிட்டால், அவர்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.

பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் வசிக்கும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் வசிப்பிட சான்றிதழ் தேவை என தொடர்புடைய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இனிமேல் யாரேனும் ஒருவர் காணாமல் அடையாள அட்டைகள் குறித்து முறைப்பாடு செய்ய வந்தால், அந்த அடையாள அட்டை காணாமல் போயுள்ளதென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

முறைப்பாடு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

முறைப்பாடு பதிவு செய்வதற்கு நிபந்தனைகளை முன்வைக்கக் கூடாது என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நபர்கள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 16-1 க்கமைய, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Posts