Ad Widget

காணாமல் போனோரில் 23 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

காணாமல் போனோரில் 23 பேருக்கு மரணச் சான்றிதழ் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போது வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

vanni-news

கிளிநொச்சி மாவட்டத்தில் காணமல் போன 426 பேரின் உறவுகளின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும் சேவை கிளிநொச்சி மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

நீதி மற்றும் சமாதானத்திற்கான அமைச்சு, அரச நிர்வாக அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, வேலைவாய்ப்பு பணியகம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் ஆகியன இணைந்து இந்த நடமாடும் சேவையை மேற்கொண்டனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்,

காணாமற்போனோரில் 75 பேருக்கு நஷ்டஈடுகள் வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. புனர்வாழ்வு அதிகார சபையினால் 7 பேருக்கு தலா 100,000 பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன. ஆறு பேருக்கு வீட்டுத் திட்டங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 5 பேருக்கு வருடத்திற்கு 4 வீத வட்டியில் சுயதொழில் கடனாக 2 இலட்சம் ரூபா வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 4 பேருக்கு 1 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவர் மகளிர் விவகார அமைச்சினால் 14 மாணவர்களுக்கு தலா 3,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூக சேவைகள் அமைச்சினால் 5 பேருக்கு சக்கர நாற்கலிகள் வழங்குதற்கும் 15 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்குவதற்கும் பெற்றோரை இழந்த 10 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 20 பேருக்கு முதியோர் அடையாளஅட்டைகளும் வழங்கப்பட்டன.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் 2 வாரங்களில் பூர்த்தியாக்கப்பட்டு உரியவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தொவித்தார்.காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த நடமாடும் சேவையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இங்கு பதிவுகளை மேற்கொள்ள வந்த மக்களிடம் நீங்கள் காணாமற்போனோர் தொடர்பில் நஷ்டஈடுகளைப் பெற விரும்புகின்றீர்களாக எனக் கேட்டபோது அதற்கு காணாமற்போனோரின் உறவினர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், உதவிகளைப் பெறுவதற்கு மரணச் சான்றிதழினையும் பெற்றுக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் எனக் கேட்கப்பட்டதாக காணாமற்போனாரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த நடமாடும் சேவையின் போது பல தாய்மார் நஷ்டஈடுகள் வழங்குவது எங்கள் பிள்ளைகளுக்கு ஒப்பானதல்ல எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும் எனக்கூறினர்.

‘நான் எனது 4 மகன்களையும் காணாமல் நித்தம் தவித்து கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருக்கின்றேன். எனது மகன்கனைத் தாருங்கள் எனக்கு இந்த நஷ்டஈடுகள் வேண்மென் தாயார் ஒருவர் கதறி அழுதார்.

இன்னுமொரு தாயார் ‘நீங்கள் எனக்கு என் மகன் காணாமற்போனதிற்காக ஒரு லட்சம் ரூபா நஷ்டஈடு தருவதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் எனது மகன் எனக்கு ஒரு வருடத்தில் 10 இலட்சம் ரூபா உழைத்து தருவான் எனக்கு என் மகன்தான் வேண்டும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இவ்வாறு பலர் இந்த நடமாடும் சேவையினை புறக்கணித்து, தங்கள் காணாமற்போன உறவுகள் தான் வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றதைக் காணமுடிந்தது.

Related Posts