Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தலையிடக்கூடாது!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம்.

காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம்.

அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம்.

இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம்.

இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.

இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார்.

Related Posts