Ad Widget

காணாமற்போன வாகனங்களைத் தேடும் புதிய அரசு காணாமற்போனவர்கள்பற்றி அக்கறை காட்டவில்லை

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்களைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தும் புதிய அரசு அதுபற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

6

காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.02.2015) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு ஆட்சிபீடம் ஏறிய புதிய அரசு தங்களுடைய வாழ்விலும் மாற்றத்தைத் தரும் என்று தமிழ் மக்கள் நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடுதான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளால் தோற்கடித்தார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் புதிய அரசு நடந்து கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இதுவரையில் எங்கே என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் உள்ளனர். அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். போரின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளும், இராணுவத்திடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட போராளிகளும் ஏராளமானவர்கள் உள்ளார்கள். இவர்கள் எல்லோரும் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையோடு தினம் தினம் பரிதவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்குப் புதிய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

போர் முடிந்தாலும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இன்னும் நல்லிணக்கம் உருவாகவில்லை என்று புதிய ஜனாதிபதி கூறியிருக்கிறார். அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையின் முதற்கட்டமாக அவரது நூறு நாள் வேலைத் திட்டத்தில் காணமற்போனவர்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் விடயத்தையும் அவர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன யாழ்ப்பாணத்தில் படையினர் மத்தியில் ஆற்றிய உரை புதிய அரசு மீது நம்பிக்கையை இழக்க வைப்பதாகவே உள்ளது. வானத்திலோ, கடலிலோ இராணுவ முகாம்களை அமைக்க முடியாது, தரையில்தான் அமைக்க முடியும் என்றும் வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படமாட்டாது என்றும் அறிவத்திருக்கிறார்.

எமது மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்க, அவர்களது நிலங்களில் இராணுவம் நிலை கொண்டிருக்கிறது. எமது வடக்கு மாகாணசபையின் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளிலும் கட்டிடங்களிலும் படையினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து இராணுவத்தினரை மீளப் பெற்றுக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப் புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு சொல்லளவில் இல்லாமல் செயலளவில் இருந்தால்தான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டி வளர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

படங்களுக்கு..

Related Posts