கடந்த 20ஆம் திகதி காணாமற்போன யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று வெள்ளிக்கிழமை (24) நெல்லியடி, முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மேற்படி பெண் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறையிலுள்ள நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும் மறுநாள் வரையில் அவர் வீடு திரும்பாததையடுத்து, பெண்ணின் கணவன் 21ஆம் திகதி மாலை, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பதிவு செய்தார்.
இந்நிலையில், மேற்படி பெண் இன்று வெள்ளிக்கிழமை (24) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவ்விடத்திற்கு சென்ற பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன், மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.