Ad Widget

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கையில் 500ற்கு மேற்பட்டோர் தமது உறவினர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

வறுமை காரணமாக பல குடும்பங்கள், காணாமற் போனவர்களைத் தேடும் நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன. இதனால் அத்தகைய குடும்பங்களைத் தெரிவுசெய்து வட மாகாணசபை உதவ முன் வரவேண்டுமெனவும், காணாமற் போனவர்களை தேடும் உறவுகளுக்கு வடமாகாணசபை பக்க பலமாக இருக்கவேண்டுமெனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமற் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரில் அரசியல் செய்வதை விடுத்து உண்மையாக போராடவேண்டுமெனவும் அரசியல் பழிவாங்கல்களுக்காக காணாமற்போனவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் எதிர்வரும் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தை முன்னெடுக்க காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத்தாலும் ஓட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள், மற்றும் முள்ளிவாய்க்கால் பெரும்போரின் போதும் அதன் பின்பும் காணமாமல் போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத்தரக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகளும் காலை 9 மணியில் இருந்து கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதபோராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், கல்வி சமுகத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஊடவியலாளர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவுகள், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அனைவரையும் ஆதரவு தந்து கலந்துகொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட காணாமல் போகச் செய்ய்பட்ட உறவுகள் சிறைக்கைதிகளின் உறவுகள் போன்றவற்றிற்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts