Ad Widget

காசோலை மோசடியில் சிக்கிய முன்னணி உறுப்பினர்!!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் சபையின் ஐ.தே.கட்சியின் உறுப்பினரிடம் நம்பிக்கை அடிப்படையில் பின்திகதியிடப்பட்டு பெற்றுக் கொண்ட காசோலையை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாவினை கையாடல் செய்ய முற்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த உறுப்பினர் பணத்தினை மீளச் செலுத்திய நிலையில் முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை பொறுப்பிற்காக எனக்கோரி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உறுப்பினராகவுள்ள ஒருவரிடம் இருந்து ஓர் வெற்றுக் காசோலை ஒற்றினைப் பெற்றுள்ளார். அவ்வாறு பெற்றுக் கொண்ட காசோலையை ஓர் நகைக்கடைக்கு வழங்கியுள்ளார். அவ்வாறு வழங்கியுள்ள காசோலையில் குறித்த திகதிக்குள் வர்த்தக நிலையத்திற்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருக்கோ பணம் வழங்கப்படவில்லை.

இருப்பினும் காசோலையில் குறிப்பிட்ட திகதியில் நகைகடை உரிமையாளர் காசோலையை வைப்பிச் செய்துள்ளார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரின் கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர் காசோலைக்குரிய பணத்தினை ஐ.த்.கட்சியின் உறுப்பினர் பல தடவைகள் கோரியபோதும் த.தே.ம.முன்னணி உறுப்பினர் ஏமாற்றுவது மட்டுமன்றி ஐ.தே.கட்சி உறுப்பினரை தகாத முறையிலும் ஏசியுள்ளார். இதனையடுத்து தனது கணக்கில் இருந்து பெற்ற பணம் வங்கியின் வட்டிப்பணம் உள்ளிட்ட 2 லட்சம் ரூபா பணத்தை பெற்றுத் தருமாறு ஐ.தே.கட்சியின் உறுப்பினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஐ.தே.கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

திருமண நிகழ்வு ஒன்றிற்கான நகை கொள்வனவிற்காக ஓர் காசோலை பொறுப்பிற்கு வழங்கி காசோலையை நகை கடை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டு காசோலையில் குறிப்பிடும் திகதிக்கு முன்பு கடை உரிமையாளரிடம் பணத்தை வழங்கி காசோலையை மீளப்பெற்று தருவதாக கூறியே காசோலையை பெற்றார். சக உறுப்பினர்தானே ஏமாற்ற மாட்டார் என நம்பினேன். அதன் பின்பு எனது காசோலை ஒன்றிற்கு வங்கியில் பணம் இல்லை எனத் திரும்பிய பின்பே இவர் பெற்ற காசோலை வங்கியில் வைப்பிட்டமை தெரியவந்தது.

இதன்பின்பு பல தடவைகள் பணத்தை கோரியபோதும் என்னை அச்சுறுத்தும் வகையில் ஏசுகின்றார். இதனால் ஏமாற்றிய பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு பொலிசில் முறையிடப்பட்டு பின் சமரசத்துடன் பணத்தை வழங்கினார். எனத் தெரிவித்தார்.

Related Posts