நல்லூரில் உள்ள ‘கருவி’ மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (31.10.2015) இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் ‘கருவி’ மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத் தலைவர் தர்மசேகரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு மேற்படி கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் ‘கருவி’ மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் செயலாளர் ஜசிந்தன், கனடாவில் இருந்து வருகை தந்த சமூக ஆர்வலர் கணேசலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி அவுஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பு மாதாந்தம் பத்து பிள்ளைகளுக்கான நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்த அமைப்பு இத்தகையதொரு உதவியை வழங்கி வருகின்றமை வரவேற்கக் கூடியது. வெளிநாடுகளில் லட்சக்கணக்கான எமது மக்கள் வாழ்கின்றனர். ஆனால், ஒரு சிலர்தான் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் இங்கு வாழும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
முக்கியமாக கல்விக்கான ஊக்குவிப்பு உதவி என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம் ஆகும். மேலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எமது உறவுகள் இப்படியான தேவைகள் உள்ள பிள்ளைகளை அடையாளம் கண்டு அவர்களின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.