Ad Widget

கருணாவையும் இணைத்து புதிய கூட்டணியை அமைக்கப் போகிறாராம் ஆனந்தசங்கரி!

கருணாவையும் வேறு பல கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர்-

தற்போது எமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வேறு சில கட்சிகளும் புதிய கூட்டணியை அமைக்க ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவர்களுடன் பேச்சு இடம்பெற்று வருகிறது. எமது கட்சியில் இணைவது தொடர்பில் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) பேசியிருக்கின்றார். அவரையும் எமது கூட்டணியில் இணைந்துக் கொள்ளலாம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முழுமையான அக்கறை இல்லை.அவர்கள் வெறுமனே தேர்தல் காலத்தில் மட்டும் குறை குற்றம் கூறி கட்சிகளுக்கிடையில் முட்டி மோதிக் கொண்டு தேர்தல் முடியும் வரை மட்டுமே கூட்டமைப்பாக செயற்படுகின்றனர்.

தேர்தல் முடிவநை்த பின்னர் அவர்களுக்குள் கட்டமைப்போ அல்லது கொள்கையோ கிடையாது. அவர்கள் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் பயணிப்பார்கள். இதுவே காலங்காலமாக நடைபெறுகிறது.

ஒரு கட்சியினரின் அதிலும் ஒரு சிலரின் முடிவே தமிழ்க் கூட்டமைப்பின் முடிவாக கூறப்படுகின்றது. இதனை அங்கத்துவக் கட்சிகள் பகிரங்கமாகவே தெரிவித்தும் வருகின்றன.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமை இல்லை. தேர்தலுக்கு மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பாவிக்கின்றனர். அதன்பின் தனித் தனியாகவே செயற்படுகின்றனர் எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

Related Posts