நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
2013 நவம்பர் 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது சடலத்தில் சூட்டுக்காயங்கள் இருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து கந்தசாமி கமலேந்திரன், ரெக்சியனின் மனைவி அனிதா ஓட்டோ சாரதி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பிலான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதான சந்தேகநபரான கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.