கனேடிய உயர்ஸ்தானிகர் செலி விடிங் யாழ்.வருகை தந்து யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடினார்.
நேற்று காலை 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திலுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக கனடா அரசால் ஏதேனும் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அதற்கு அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்திலே முன்னேற்றம் தொடர்பான சுட்டிகள் குறித்து தெரிவித்ததோடு குடும்பத்தின் சராசரி வருமானம் 2010 இலிருந்து 18314 தற்பொழுது 34780 ஆக மாற்றமடைந்துள்ளது. அதேபோல் 2010ஆம் ஆண்டு 16 வீதமாக இருந்த வறுமை மட்டம் தற்பொழுது 8.2 வீதமாக குறைவடைந்துள்ளது.
யாழ்.மாவட்டத்திலே முதன்மை பெறும் தேவையாக வீட்டுத் தேவையே உள்ளது. எனவே வீட்டுத்தேவைகள் தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவை நிறைவேற்றப்படவில்லை.எனவே தூதுவரிடம் இந்த வீட்டுத் தேவையை முடியுமான அளவு பூர்தத்தி செய்து தருமாறு கோரிக்கை ஒன்றினை விடுத்தார்.
இதேவேளை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றோம்.இருப்பினும் கைத்தொழில் பேட்டைகளுக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டும் சரியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை.வரையறுக்கப்பட்ட நிலங்கள் மட்டும் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மீதமுள்ள நிலங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் .எனவே அதற்கான இயன்ற உதவிகளை செய்து தருமாறும் தூதுவரிடம் அரச அதிபர் கோரிக்கை ஒன்றினை விடுத்தார்.