Ad Widget

கத்தியுடன் அலையும் நபரால் பெரும் பரபரப்பு: கண்டும் காணாதது போல் பொலிஸார்

சுன்னாகம் நகரப் பகுதியில் நகைக் கடையொன்றின் உரிமையாளராகவுள்ள குடும்பஸ்தரொருவர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அதனையண்டியுள்ள பல்வேறு தரப்பினரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சுன்னாகம் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்று அங்கு பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் மாணவிகளுடனும், பெண்களுடனும் சேஷ்டை விடும் குறித்த நபர் சுன்னாகம் பொதுச் சந்தைக்குள் சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் நுகர்வோருடனும் அடிக்கடி தர்க்கத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை(09-06-2016) காலை சுன்னாகம் பிரதான பேருந்து நிலையத்தில் நின்ற மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட போது மாணவிகள் அங்கிருந்து அலறியடித்தவாறு ஓட்டமெடுத்துள்ளனர். இதன் பின்னர் ஒரு இளம் பெண்ணைக் குறித்த நபர் தாக்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி சுன்னாகம் பொதுச் சந்தையில் வெங்காயம் வாங்குவதற்காக வருகை தந்த வயோதிபரின் 2500 ரூபா பணத்தைக் குறித்த நபர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். பின்னர் அவர் அருகிலுள்ள கடையொன்றில் தான் கடனாக வாங்கிய 2000 ரூபா பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மிகுதிப் பணத்துடன் குறித்த நபர் சுன்னாகம் சந்திக்குச் சென்றுள்ளார். இதன் போது மேற்படி நபரைப் பின் தொடர்ந்து பணத்தை மீட்பதற்காக வர்த்தகரொருவர் சென்ற நிலையில் போத்தலை உடைத்துக் குறிப்பிட்ட வர்த்தகரைத் தாக்க முற்படவே அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் தெரியவருகிறது.

இதன் போது அப் பகுதியில் சுன்னாகம் போக்குவரத்துப் பொலிஸார் காவல் கடமையில் நின்ற போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதாகப் குறிப்பிட்ட நபரைப் பின் தொடர்ந்து சென்ற வர்த்தகர் தெரிவித்தார்.

Related Posts