யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கண்தானம் செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும், கண்தானம் மிகவும் உன்னதமான செயல் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கலாநிதி மு.மலரவன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்தானம் செய்யும் கலாசார நடைமுறை, யாழ்ப்பாணத்தில் இல்லாத காரணத்தால் கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் குறைவடைந்துள்ளது. இதில் மாற்றம் வந்து, அனைவரும் கண்தானம் செய்ய முன்வரவேண்டும்.
ஒருவர் கண்தானம் செய்தால் அதனைக் கொண்டு இருவருக்கு பார்வையளிக்க முடியும். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மண்ணோடு மண்ணாக அல்லது தீயில் எரியும் உடலிலுள்ள கண்ணைத் தானம் செய்வதால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.
கண்தானம் செய்வதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தேவை குறித்து, யாழ்.போதனா வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சை நிலையம் சமூக சேவைகள் அமைப்புக்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.