வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்தது என்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்த பெண் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘2014ம் ஆண்டு வவுனியாவில் வைத்து எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும் போது புதுக்குளம் பகுதியில் வைத்தது கணவர் கொலை செய்யப்பட்டார்.
கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது. பல்வேறு சிரமத்தில் கணவரின் இறுதி கிரியைகளை கூட முறையாக செய்ய முடியாது போனது. கணவரை கொன்றவர்கள் இராணுவத்தினரே என கண்ணால் கண்டவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட எனது கணவருக்கு நீதிவேண்டும்.
கிளிநொச்சியில் வசிக்கும் எனது குடும்பம் பல்வேறு நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றது. கணவரை இழந்த நிலையில் கடும் கஸ்டத்தில் வாழ்கின்றோம். 3 பிள்ளைகளுடன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம். சமுர்த்தி கூட எமக்கு வழங்கப்படவில்லை. நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.