நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியை அவதானித்த பின்னர் இராணுவ தளபதி இன்று ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கூடும்.
தற்போதைய கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பான முடிவுகள் எட்டப்படும். நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்படும்.
கோரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளிலும் நோய்த்தொற்றுகள் மீளவும் அதிகரித்திருக்கின்றது.
எனவே பொதுமக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கவும் செயல்படவும் வலியுறுத்துகின்றோம்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.