Ad Widget

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையில் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தி்க நிலைகொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கன மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts