Ad Widget

கடற்படைக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு

மன்னார் மாவட்டத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில், காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு முன் சாட்சியமளித்தவர்கள், தங்களது உறவுகள் காணாமல் போனமைக்கு கடற்படையினரே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

அத்துடன், தங்களது உறவுகள் காணாமல் போனதற்கு கடற்படையே பதில் கூற வேண்டும் எனவும் அவர்கள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

missing-people-mannar

வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடம் பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கடந்த 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகம் ஆகியவற்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்ததோடு இன்று திங்கட்கிழமை 11ஆம் திகதி மடு பிரதேச செயலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரண்துசச் செயலக கட்டிடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய 3ஆவது அமர்வு மாலை 6.30 மணிவரை இடம்பெற்றது. அன்றைய தின சாட்சியப்பதிவுக்காக ஆணைக்குழுவினால் 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்களில் 47 பேர் மாத்திரமே தமது உறவுகள் குறித்து சாட்சியம் அளித்தனர். இதேவேளை தமது உறவுகளை காணவில்லை என மேலும் 89 பேர் புதிய பதிவுகளை ஆணைக்குழுவிடம் நேற்று (10) கையளித்தனர்.

மன்னார் மாவட்டம் தீவுப்பகுதி என்பதினால் முற்று முழுதாக கடல் வளத்தை கொண்டதாக காணப்படுவதோடு மன்னார் தீவுப்பகுதிக்குள் உள்ள அதிகளவான மக்கள் மீனவ குடும்பங்களாக உள்ளனர். கடற்கரைப்பிரதேசங்களையும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடற்படையின் பிரசன்னமும் அவர்களுடைய காவலரண்களும் அதிகமாகவே இருந்தது.

கிட்டத்தட்ட 4 பாரிய கடற்படை முகாம்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ளன. அந்த வகையில் நேற்று (10) சாட்சியப்பதிவுகளை மேற்கொண்டவர்களில் அதிகளவானவர்கள் கடற்படையினரையே பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். எங்கள் உறவுகள் காணாமல் போனதற்கு கடற்படையே பதில் கூற வேண்டும் என துணிந்து சாட்சியங்களை ஆணைக்குழு முன்னால் பதிவு செய்தனர்.

அத்துடன் 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தங்களது உறவினர்கள் பிடிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் தள்ளாடி இராணுவ முகாம், தாராபுரம் கடற்படை முகாம், சனிவிலேச் கடற்படை முகாம் மற்றும் தலைமன்னார் கடற்படை முகாம்களுக்குள் கொண்டு செல்லப்பட்டனர் என அதனை நேரில் கண்ட உறவினர்கள் சாட்சியம் வழங்கினர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் அக்கடற்படை முகாம்களில் கடமையாற்றிய அதிகாரிகளின் பெயர் விபரங்களையும் ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் இருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவோம் என காணாமல் போன உறவினர்களிடம் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

மேலும் பணம் வழங்கினால் உங்களது உறவுகளை விடுவிக்க முடியும் என்று பலர் ஏமாற்றி வருகின்றனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த அமர்வின் போது (10) வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டமை, மோட்டார் சைக்கிளில் போகும் போது இடைமறித்து முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டமை, வாகனத்துடன் கடத்தப்பட்டமை, கடலில் வைத்து சுடப்பட்டமை, கைது செய்யப்பட்டமை, ஊர் ஆட்களுக்கு காசு தருவதாக கூறி கடத்திக் கொடுத்தமை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

நாங்கள் திட்டவட்டமாக கூறுகின்றோம், கடற்படையினரைத் தவிர எங்களின் உறவுகள் காணாமல் போனதற்கு வேறு யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். எனவே அரசாங்கமே பதில் கூற வேண்டும். எங்களுக்கு அரசின் உதவிகள் எவையும் எங்களுக்கு வேண்டாம் பிள்ளைகளை தாருங்கள் என சாட்சியம் வழங்கினர்.

நேற்றைய (10) சாட்சியப் பதிவினை கவனிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிராய்வா, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். இதேவேளை, இன்று (11) மடு பிரதேச செயலக பிரிவில் இருதி பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts