Ad Widget

கடமையில் இருந்து நடுநிலைமை தவறவில்லை என்கிறார் சி.வீ.கே

அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் கூறிய கருத்து தொடர்பில் அவைத்தலைவரிடம் வினாவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றுவது கட்சித் தீர்மானம். கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அந்த நடவடிக்கை கட்சியின் கட்டுப்பாட்டுக்கமைய செய்யப்பட்டது.

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது மாகாண சபையில் விவாதிக்கப்படமுடியாது. அதற்கான மரபோ சட்டமோ இல்லை. அவ்வாறு நம்பிக்கையீனமான நிலை ஏற்படுத்தப்படும் பொருட்டு அந்த முறைப்பாடு ஆளுநரிடமே சமர்ப்பிக்கப்படவேண்டும். ஆளுநர் பொருத்தமான நடவடிக்கை எடுப்பார்.

அதிலும் முக்கியமான ஆளுநர் முதலமைச்சரை மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறுவார். அப்படி கோரும்போது முதலமைச்சர் ஒருவரின் நம்பிக்கைப் பிரேரணையை சபையில் தாக்கல் செய்வார். அப்போது தான் அந்தப் பிரேரணை விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படும்.

சபையிலே நம்பிக்கையில்லாப் பிரரேரணை என்பது இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே உண்டு. எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவைத்தலைவருக்குச் சமர்ப்பிப்பது என்பது நடைமுறை இல்லை. ஆளுநரின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதுதான் நடைமுறை என தெரிவித்தார்.

Related Posts