Ad Widget

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நெடுந்தீவுக் குதிரைகள் திருகோணமலைக் கடற்படை முகாமில்

நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகப் பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் இருந்து படையினரால் குதிரைகள் கடத்தப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ்மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேரா தரைப்படையினர் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதன் பின்னணிபற்றித் தெரிந்து கொள்வதற்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துடன் நெடுந்தீவுக்கு நேற்று வியாழக்கிழமை (11.09.2014) சென்றிருந்தார்.

நெடுந்தீவில் மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதேசசபை அதிகாரிகள், கடற்படைமுகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரட்ன மற்றும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தபோதே கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நான்கு குதிரைகளும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெடுந்தீவில் வாழுகின்ற போனிரகக் குதிரைகள் போர்த்துக்கீசரால் கொண்டுவரப்பட்டவை. எனினும் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நெடுந்தீவில் பன்னெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு அகஇனக்கலப்பில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக வடக்குக்கே உரித்தான தனித்துவமான ஒரு ரகமாகவும், வடக்கின் மரபுரிமைகளில் ஒன்றாககவும் இன்று இந்தக் குதிரைகள் மாறி உள்ளன. எனினும் ஏறத்தாழ 500 குதிரைகள் மட்டுமே வாழ்வதால் இவற்றை உரியமுறையில் பாதுகாக்கத் தவறினால் விரைவிலேயே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனைப் பலரும் சுட்டிக்காட்டியதன் காரணமாக இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத்திணைக்களம் நெடுந்தீவில் குதிரைகளுக்கு 537 ஹெக்டெயர் பரப்பளவில் சரணாலயம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான அனுமதிகோரி எமது முதலமைச்சரிடம் வடமாகாணக் காணி ஆணையாளர் கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஒருபுறம் குதிரைகளைப் பாதுகாப்பதற்காகச் சரணாலயத்துக்கு அனுமதியைக் கோரிவிட்டு இன்ணெருபுறம் கடற்படையினர் குதிரைகளைப் பிடித்து செல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடனது. இது கண்டிக்கத்தக்கது. திருகோணமலை கடற்படைமுகாமில் குதிரை ஒன்று தனிமையில் வாடுவதாகவும் அதற்குத்துணையாகவே நெடுந்தீவிலிருந்து குதிரைகள் எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும் தனது மேலதிகாரிகளின் வேண்டுதலின் பேரில் வனஜீவராசிகள் பாதுகாப்புத்திணைக்களத்தின் அனுமதியுடன் தாம் இதற்கு அனுமதித்ததாகவும் நெடுந்தீவு கடற்படைமுகாம் அதிகாரி என்னிடம் தெரிவித்துள்ளார்.

தவறான முன்னுதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்துவிடக்கூடாது என்பதால் எடுத்துச் சென்ற குதிரைகளை மீளவும் நெடுந்தீவிலேயே கொண்டுவந்து விட்டுவிடுமாறு திருகோணமலைக் கடற்படை உயர் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம். கடற்படையினர் தங்களுக்குக் குதிரைகள் தேவையென்று கருதினால், இலங்கைக் காவல்துறையில் ஒரு பிரிவாகவுள்ள குதிரைப்படைப்பிரிவில் இருந்து இளைப்பாறும் குதிரைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

1

4

5

Related Posts