கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும்.

அத்துடன், பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.01 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.57 டொலர்களாகக் காணப்படுவதுடன், இது 6.67 சதவீத பாரிய விலை உயர்வை பதிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் பிரெண்ட ரக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 80 டொலரை எட்டியிருந்தது

இதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட ஈரானின் தெற்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய தாக்குதல்களுக்குப் பின்னர், ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

நேற்று ஈரான் நடத்திய கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பழித்தீர்க்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இது மீண்டும் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் இதுவரை எவ்வித பதிலையும் உடனடியாக வழங்கவில்லை.

எனினும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடி பதில் வழங்கப்படும் என ஈரானின் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts