ஓற்றுமை என்பதும் ஒற்றையாட்சி என்பதும் வேறுபட்டவை, இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்திடம் கையளித்துள்ள இறுதி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘ஓற்றையாட்சி வேறு, ஒற்றுமை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் தனிப்பட்ட ஒரு இனத்திற்கு அதாவது பெரும்பான்மை இனத்திற்கு போய்ச் சேரும். இதன்மூலம் அவர்கள், சட்டங்களை காலத்திற்கேற்ப அவர்களின் தேவைக்கமைய மாற்றம் செய்வார்கள். இதற்கு அமையவே 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாணத்திற்கான அதிகாரங்கள், 1992 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸவினால் மாற்றப்பட்டது.
ஓற்றையாட்சியினால் இவ்வாறான சில சட்டங்களை மாற்றக்கூடிய சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஓற்றுமை எனப்படும் போது அது வேறு மாதிரியானதாகும். அதாவது ஒற்றையாட்சி இல்லாமல் சகலரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படுவதாகவும். இதன்போது ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.” என்றும் கூறினார்.