Ad Widget

ஒரு மீற்றர் இடைவெளி என்பதை முடிந்தளவு மக்கள் பின்பற்ற வேண்டும்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்த போக்கை காண்பிக்கின்றது.

இவ்வாறான நிலையில் அவதானம் மிக்க பகுதிகளை அடையாளப்படுத்தாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். 357 மருத்துவ சுகாதார பிரிவுகளில் 60 இற்கும் குறைவான பகுதிகளிலேயே அதிக கூடிய அவதானமுடைய பகுதிகள் காணப்படுகின்றன.

எனவே, கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திலேயே நிலைமை காணப்படுகிறது. அண்மையில் வீடுகளிலேயே இறந்த சிலருக்கு முதலாவது பரிசோதனையில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவும் உயிரிழந்ததன் பின்னர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற முடிவும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலைமை தொடருமானால் தற்போது தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் மரணங்களைப் பற்றி பேச வேண்டியேற்படும்.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று ஏற்படவில்லை. மாறாக வீட்டிற்குள் வைரஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள், பொருளாதார மத்திய நிலையங்கள், ஆடை தொழிற்சாலை என்பவற்றில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் அது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனையை விட செலவு குறைந்த முறையில் துரிதமாக முன்னெடுக்கப்படும் பரிசோதனைக்கு இலங்கை மாற வேண்டும். அத்தோடு மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்துகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts