Ad Widget

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி என்பதே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – சித்தார்த்தன்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானபம் அமையப் பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. தீர்வுத்திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை. ஆனால் இலக்கை அடைவதற்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. கூட்டமைப்புக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது என வெளியில் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். எங்கள் ஒற்றுமையை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் காப்பாற்ற வேண்டும்.

நாம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் நியாயமான ஒரு பாதையை நோக்கி பயணிப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். அனைத்து தேர்தல்களுமே தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல் ஆக உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் எவ்வாறான பலமுள்ளவர்கள் என்பதைக் காட்டும் தேர்தலாக இருக்கின்றது.

மஹிந்தவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற ஒட்டுமொத்த சிறுபான்மையினமும் ஒன்றுபட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்கும் முன்னதாக தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தனர்.

இது தமிழ் மக்கள் எடுத்த சரியான முடிவு. இவ்வாறு இல்லாமல் மஹிந்த மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியிருந்தால், வடக்கும் சிங்களமயமாக்கப்பட்டு தமிழ் இனம் இன்னமும் பலவீனமாகியிருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். தற்போதுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளை நாங்கள் அறிவோம். வேலையில்லா பிரச்சினை அவர்களுக்கு பெரிய பிரச்சினையாகவுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் கட்சிகள் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் சுயவிபரக் கோவைகளை சேகரிக்கின்றன. அதனை நம்பி இளைஞர்கள் ஏமாறவேண்டாம். வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அவர்களால் முடியாது. அவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர்.

வடமாகாணசபை தேவையான நிதியைப் பெற்றுக்கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள மஹிந்த அரசாங்கமும் முட்டுக்கட்டையாகவிருந்ததுடன், தற்போதய அரசாங்கமும் சரியான பதிலை வழங்கவில்லை.

இதனைவிட தீர்க்கக்கூடிய பிரச்சினைகளையும் நாடாளுமன்றம் மூலம் தீர்க்க முடியாதுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் நாங்கள் பலமான ஒரு கட்சியாகவிருக்க வேண்டும் என்றார்.

Related Posts