Ad Widget

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் ஹுசைன் குறித்து தமிழர் தரப்பும் திருப்தி தெரிவிப்பு

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம்,புதிய ஆணையாளர் குறித்து இலங்கைத் தமிழர் தரப்பும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கைத் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

al-husain

பதவி விலகிச் செல்லும் நவநீதம்பிள்ளை குறித்து, இலங்கை அரசு காட்டமான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.

அந்த விவகாரம் குறித்து தமது பிரதிபலிப்பை வெளியிட்ட இரா.சம்பந்தன் எம்.பி., அப்போதே புதிய ஆணையாளர் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டார்.

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாமல் – பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக, நீதியாக செயற்பட்டு வருகின்றார்.

இதனால் ஆத்திரம்கொண்ட இலங்கை அரசு, அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைக் கண்டபடி விமர்சித்து வருகின்றது.”- என்றார் சம்பந்தர்.

இலங்கை அரசு மற்றவர்களைக் குற்றம்சாட்டாது தான் விட்ட தவறுகளைத் திருத்துவதுடன் – தான் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைவிடுத்து நவநீதம்பிள்ளையே இலங்கை விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தி விட்டார் என்று இலங்கை அரசு புலம்புவதில் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நவநீதம்பிள்ளை தமது கடமைகளை ஐ.நா. சாசன விதிமுறைகளுக்கமைய, ஐ.நா. உறுப்புரிமை நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய, செய்துவருகின்றார்.

தனிப்பட்ட ரீதியில் அவர் ஒருபோதும் செயற்படவில்லை. அவ்வாறு அவர் செயற்படவும் முடியாது. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், பக்கச் சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாகச் செயற்படக்கூடியவரையே மனித உரிமைகள் ஆணையாளராக ஐ.நா. நியமிக்கின்றது.

அந்தவகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக, நீதியாக செயற்பட்டு வருகின்றார்.

இதனால் ஆத்திரம்கொண்ட இலங்கை அரசு, அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைக் கண்டபடி விமர்சித்து வருகின்றது. இலங்கையில் அரசு போர் நடைபெற்ற காலத்தின்போது அப்பட்டமாக மீறிய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளை கேள்விகளைத் தொடுத்து ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் தீர்மானத்துக்கமைய சர்வதேச விசாரணையை கொண்டு வந்தமையால் இந்த அரசு கடும் கோபத்துடன் அவரைக் கடுமையாக சாடி வருகின்றது.

நவநீதம்பிள்ளையுடன் மட்டுமல்ல, அவருக்கு முதல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த லூயிஸ் ஆர்பருடனும் இலங்கை அரசு வெளிப்படையாக முரண்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்று அப்போது இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் கூறியமையை அடுத்து அவரைக் கண்டபடி இலங்கை அரசு விமர்சிக்கத் தொடங்கியது. ஆனால், லூயிஸ் ஆர்பர் நீதியாக, நேர்மையாக, பக்கச்சார்பில்லாமல் தமது கடமைகளைச் செய்தார். அவரின் வழியில் நவநீதம்பிள்ளையும் தமது கடமைகளை ஆரம்பத்திலிருந்து இன்றுவரை செய்துவருகின்றார்.

லூயிஸ் ஆர்பரும், நவநீதம்பிள்ளையும் தமது நாடுகளில் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக முன்னர் கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவர்கள் நீதிக்கு எதிரானவர்கள் அல்லர். அதேவேளை, புதிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்கவுள்ள செயிட் அல் ஹுசைனும் இவர்களின் வழியில் நேர்மையாக தனது கடமைகளைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எனவே, இலங்கை அரசு மற்றவர்களைச் குற்றஞ்சாட்டாது தான் விட்ட தவறுகளைத் திருத்துவதுடன், தான் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.

இதைவிடுத்து நவநீதம்பிள்ளையே இலங்கை விவகாரத்தை சர்வதேசமயப்படுத்திவிட்டார் என்று இலங்கை அரசு புலம்புவதில் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை – என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.

Related Posts