Ad Widget

ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி, இரணைமாதா நகர் என்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

எனினும், 58 வயதான சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்ற இந்த நபர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காகவும், இரண்டு தேசிய ஆள் அடையாள அட்டைகளை வைத்திருந்த காரணத்திற்காகவுமே கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது தந்தையார் இரணைமாதா நகருக்குச் சென்றிருந்தபோது, ஐநா விசாரணையில் சாட்சியமளிப்பதற்கான விண்ணப்படிவம் அவரிடம் இருந்ததைக் கண்டு, சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக அவரது மகன் கிருஸ்ணராசா சுதாகரன் தெரிவித்தார்.

தமது தந்தை நேற்றிரவு வீடு திரும்பாததை அடுத்து, முழங்காவில் பகுதியில் உள்ள உறவினர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய தகவல் தெரியவந்ததாக சுதாகாரன் கூறினார்.

இன்று காலை தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்ட முழங்காவில் காவல்துறையினர், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அவரைக் கைது செய்திருப்பதாகத் தகவல் கூறப்பட்டதாகவும் சுதாகரன் தெரிவித்தார்.

ஆனால், கிருஸ்ணராசா 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றிருந்தார் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்திருந்ததாகவும், அவரிடம் இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

அந்த அடையாள அட்டைகளில் அவருடைய பிறந்த திகதிக்கான வருடம், ஒன்றில் 1954 என்றும் இன்னொன்றில் 1976 என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் அவர் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார் என்பதைக் காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related Posts