Ad Widget

ஏப்ரல் மாத ஓய்வூதியம் பற்றி ஓய்வூதியர்களுக்கு அரசின் அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 2, 3 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, நிதி அமைச்சின் சார்பில் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இவ்விரு தினங்களில் பெற முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6ஆம் திகதி அவர்களுக்கு அதனை வழங்கி முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி சிறப்புச் செயலணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிரதமர் அலுவலகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தபால் அலுவலகத்தில் பெறுவோர்

ஓய்வூதியத்தை தபால் அலுவலகம் மூலம் பெறுவோருக்கு, அவர்களது வீடுகளுக்கு அல்லது கிராம சேவகர் பிரிவிற்கு தபால் திணைக்களத்தால் கொண்டு வந்து தரப்படும்.

வங்கிக் கணக்கில் பெறுவோர்

வங்கிக் கணக்கில் பெறுவோருக்கு அந்தந்த வங்கிகளின் மூலம் உரிய நபரின் கணக்குகளில் ஏப்ரல் 2, 3ஆம் திகதிகளில் வைப்பிலிடப்படும்

பணத்தை கணக்கிலிருந்து பெறல்

வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க எதிர்பார்க்கும் ஓய்வூதியதாரர், ஊரடங்கு காரணமாக ஏற்படும் போக்குவரத்து சிரமத்தை கருதி இதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம சேவகரை தொடர்புறவும்

வங்கியிலிருந்து பணத்தை பெற விரும்புவோர், தமது கிராமசேவகருக்கு நேர காலத்துடன் அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஏப்ரல் 2, 3 ஆகிய தினங்களில் அவர்களை உரிய வங்கிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதற்காக முப்படை மற்றும் பொலிஸாரினால் உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்பதோடு, இதற்கு கிராம சேவகரின் உதவி பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணக்கம்

அந்தந்த ஊர்களில் காணப்படும் அனைத்து வங்கிகளினதும் ஒரு கிளையாவது அன்றைய தினம் திறந்து வைப்பதற்கு, அரச மற்றும் தனியார் வங்கிகள் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளது – என்றுள்ளது.

Related Posts