Ad Widget

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் எச்சரிக்கை!!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப்போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் இடம்பெறக்கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் பேராசிரியர் மெகான் டி சில்வா.

Prof.-Mohan-de-Silva

இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கலைப்பீட மாணவர்கள்தான் மோதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கலகத் தடுப்பு காவல்துறையினர் அழைக்கப்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த யாழ். படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உதவினார்.

மாணவர் விடுதிகள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நான்கு மாணவிகள் ஓடும்போது காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர்.

புதன்கிழமை பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பிக்கும். இந்தச் சம்பவம் ஒரு தூண்டுதலாலேயே ஆரம்பமாகியது. இது இன ரீதியான மோதல் அல்ல எனவும் தெரிவித்தார்.

இதனால் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற நிலைமை ஏற்படுமோ என்ற கவலைகள் உள்ளன. இதனால், ருகுணு, பேராதனை, களனி, சிறி ஜெயவர்த்தனபுர, கொழும்பு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் தொடர்பு கொண்டு அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளேன்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்களின் தலைவர்கள் ஏழுபேரும் யாழ். பல்கலைக்கழகத்திற்குச் செல்லவுள்ளோம்.

அத்துடன், இத்தகைய சம்பவங்களின் தாக்கம் தொடர்பாக பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்த, புலமையாளர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் பிரபலமாக உள்ள தொலைக்காட்சியில், ஒளிபரப்ப யாழ். படைகளின் கட்டளைத் தளபதி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts