‘எவரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களில் ஒருமித்து நாங்கள் தீா்மானங்களை எடுக்க விரும்புகிறோம்’ என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அஸ்ரப்பின் காலம் தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அஸ்ரப் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அது நீண்ட காலமாக நடைபெற்று வந்த விடையம், என்றாலும் அஷ்ரப் அவர்கள் இறந்த பின்னர் நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கின்றோம்.
எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை, எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யவில்லை எவருடனும் நாங்கள் பேசத்தயார்.
எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடையங்களை ஒருமித்து நாங்கள் எடுக்க விரும்புகிறோம்” என இரா.சம்மந்தன் தெரிவித்தார்.