Ad Widget

எழுக தமிழ் : தமிழரசுக் கட்சி, வணிகர் கழகம் ஆதரவில்லை

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன.

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படவுள்ள இந்தப் பேரணி, கல்வியங்காட்டில் ஆரம்பித்து திருநெல்வேலி, மாவட்டச் செயலகம் வழியாக யாழ்ப்பாணம் – முற்றவெளி நோக்கிச் செல்லவுள்ளது.

இந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடினர். இதில், தமிழரசுக் கட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுப்பதற்கு மறுத்துள்ளது.

இதேவேளை, ‘இந்தப் பேரணிக்கு தாங்கள் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. கடைகளைப் பூட்டி பேரணியில் கலந்துகொள்வதற்கு நாங்கள் அறிவித்தல் கொடுக்கமாட்டோம். விரும்பினால், ஒவ்வொரு வர்த்தகர்களும் அதனைச் செய்யலாம். அது அவர்களின் விருப்பம்’ என வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

எழுகதமிழ் பேரணிக்கான காரணங்களும், கோரிக்கைகளும் சரியானவை ! ஆனால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும்- தமிழரசுக் கட்சி கவலை

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Related Posts