எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவோ அல்லது மக்களுக்கு மானியமுறையில் சலுகை வழங்கும் நிறுவனமாகவோ இருக்க எந்த அரசாங்கமும் தீர்மானம் எடுக்கவில்லை.
ஆனால் இது தொடர்பாக அரசாங்கம் விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். இன்று எல்லோரும் எரிபொருள் விலை கூடுமா, இல்லையா என அதிகம் பேசுகின்றனர்.
நிதி அமைச்சு அதிகாரிகளும் இது தொடர்பாக எம்முடன் கலந்துடையாடி வருகின்றனர். எனினும் விலை மாற்றம் தொடர்பாக அரசாங்கமே தீர்மானம் எடுக்கும். இது தொடர்பாக அமைச்சரவை, பிரதமர் மற்றம் ஜனதிபதியே முக்கிய முடிவை எடுப்பார்கள்’ என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மேலும் தெரிவித்தார்.