Ad Widget

என்னுடைய நேர்மையான அரசியலை மக்கள் அங்கீகரிப்பார்கள் அப்போ இவர்கள் இருந்த இடம் இல்லாமல் போய்விடுவார்கள் – அங்கஜன்

angajanகடந்த 27.08.2013 சாவக்கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான உண்மைத் தன்மையை தெரியப்படுத்துவதற்காகவும் அச் சம்பவம் தொடர்பில் பொலிசார் ஒரு பக்க சார்ப்பாக நடந்து கொண்டமையைக் கண்டித்தும் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சி அமைப்பாளாரும் , யாழ் மாவட்ட மாகாணசபை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் ஊடகவியளாலர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். கடந்த வெள்ளி (30.08.2013 ) அன்று கோயில் வீதி , நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற அந்த ஊடகவியலாலர் சந்திப்பில் அவரது உரை பின்வருமாறு அமைந்திருந்தது.

அனைவருக்கும் வணக்கம் ,

இதுவரை காலமுமான எனது அமைதிக்கும் இது தொடர்பில் ஊடகங்களை சந்திந்தித்து மக்களிற்கான உண்மையைச் சொல்வதில் ஏற்பட்ட தாமத்திற்கும் உங்கள் அனைவரிடமும் முதற்கண் மன்னிப்பு கேட்கின்றேன்.
அதே நேரத்திரத்தில்

இத்தனை அசம்பாவிதங்கள் , அவதூறுகள் , வீண் பழிகள் மத்தியிலும் என் மீதான நம்பிக்கையையை இழக்காமல் பொறுமை காத்து என் நலனிலும் , அது சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்திய மக்களுக்கும், பொறுப்புணர்ந்து செயற்பட்ட ஊடகங்களுக்கும் இச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அத்தோடு எமது குறுகிய கால அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் நம்பிக்கைக்கும் , அன்புக்கும் தகுதியானவனாக நடந்து கொள்வேன் என்பதையும் உறுதிபட கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கட்சியின் கொள்கை.

ஒரு கட்சியின் மாவட்ட அமைப்பாளன் என்ற நிலையில் கட்சியின் தலைமைக்கும் , மூத்த உறுப்பினர்களுக்கும் மதிக்களிக்க வேண்டியது என் கடைமை .கடந்த நான்கு ஆண்டுகளாக நான் கடினப்பட்டு கட்டி வளர்த்த ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் மக்கள் நம்பிக்கையை சிதைப்பதற்கான சதியாக சந்தேகப்படும் இச் சம்பவம் தொடர்பில் உண்மைத் தன்மையை கட்சித்தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டியதும் என் பொறுப்பாகிறது. அதேவேளை வெளியில் இருந்து வந்தவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுகளினால் கட்சியின் கட்டமைப்பு பாதிக்கப்படுவதை மாவட்ட அமைப்பாளன் என்ற நிலையில் கண்டிக்கிறேன். கட்சி தலைமையின் முடிவுகளுக்கான காத்திருப்பும் என் அப்பாவின் மீதான வீண் பழிச்சொல்லை சட்டரீதியாக எதிரிகொள்வதற்கான தயார்படுத்தலிலும் ஏற்பட்டதே இந்த கால தாமதம்.

சம்பவம் தொடர்பில் விபரித்தல் –

ஒரு மக்கள் கலந்துரையாடலுக்காக பிற்பகல் பொழுதில் கொடிகாமம் சென்றிருந்தேன். அதை முடித்துக்கொண்டு சில பிரசார முன்னெடுப்புகளுக்காக நாங்கள் எங்களது மூன்று வாகனத்திலும் கச்சாய் அம்மன் ஆலயத்தை நோக்கி சென்றுகொண்டிந்த வேளை சர்வாவும் அவர்களது ஆதாரவாளர்களும் வேறு மூன்று வாகனத்தில் எம்மை பின் தொடர்ந்தார்கள். அவர்களின் செயற்பாடு எம்மையும் எம் நடவடிக்கைகளையும் உளவு பார்ப்பது போல் அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் ஏழுந்தமையினால் அதை உறுதிப்படுத்துவதற்காக நாம் எமது வாகனங்கை நிறுத்தினோம். அப்பொழுது எங்களது வாகனங்களுக்கு முன்னால் தமது வாகனங்களை வழி மறுக்குமாறு நிறுத்தினார்கள். எம்முடன் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தி எம்மை அங்கு அமைதியான முறையில் பிரசார பணிகளை மேற்கொள்ளாமல் தடுக்க நினைக்கும் அவர்களின் நோக்கம் புரிந்து கொண்ட நாம் எவரும் எங்களது வாகனத்தை விட்டு இறங்கவில்லை. சற்று நேரம் வரை தமது வாகனங்களில் காத்திருந்தவர்கள் எமது பொறுமையை பொறுக்க முடியாமல் விலகிச் சென்றனர். அவர்கள் விலகிய சிறிது நேரத்திற்குள் அடையாளப்படுத்தப்பட முடியாத வாகனங்கள் இரண்டு எங்களை சிறிது தூரம் பின்தொடர்ந்ததையும் நாம் அவதானிக்காமல் இல்லை.

கெப்பிலியில் என்ற இடத்தில் நாம் சென்று கொண்டிருந்த போது மீண்டும் சற்று நேரத்தில் சர்வாவும் ஆதரவாளர்களும் 3 வாகனங்களில் எங்களை பின் தொடர தொடங்கினர். அவர்களது நோக்கத்தை நன்கு புரிந்து கொண்ட நாங்கள் தவசிக்குளம் மக்கள் குடியிருப்பருகில் எமது வாகனங்களை நிறுத்தினோம். எங்களை தாண்டி சென்ற அவர்கள் 50-100 மீற்றர் தொலைவில் காத்திருந்தார்கள். அந்த நிலையிலேயே பயணத்தை தொடர விரும்பாமல் வாகனங்களிலிருந்து இறங்கிய நாங்கள் அது மக்கள் குடியிருப்பாய் இருந்தனால் எமது தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரம் வினியோகித்து அங்கிருந்த மக்களுடன் உரையாட ஆரம்பித்தோம். இதனை அவதானித்த அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். உசன் நாகநாதன் வீதியில் ஏறத்தாள ஒரு மணி நேரமாக நாம் பிரச்சார பணியிலிருந்த வேளையில் எனது மெய்ப்பாதுகாவலர் ஜெயவர்த்தன கொடிகாம் பொலீஸாரிடம் நடந்த சம்பங்களைத் தெரியப்படுத்தி எங்களுக்கு பாதுகாப்பு தேவை என கோரியிருந்தார்.

கொடிகாமம் பொலிசாரிடமிருந்து பாதுகாப்போ, அது தொடர்பான பதிலோ கிடைக்காத நிலையில் சர்வாவின் அலுவலகம் முன்னால் ஏறத்தாள 200 பேர் குழுமியிருப்பதாகவும் , சந்தேகத்திற்கிடமான டிப்பர் ரக வாகனம் ஒன்று நிறுத்தப்பருப்பதாகவும் நாம் யாழ்ப்பாணம் செல்லும் வழியில் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தப்படலாம் என்றொரு தகவல் எமக்கு கிடைத்தது.

உடனடியாக சீனியர் டி.ஜ.ஜி காமினி சில்வாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நான் எந்த பிரச்சனையுமில்லாமல் யாழ்ப்பாணம் போக வேண்டும் எனவும் அதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டதிற்கிணங்க உடனடியாக என்னை கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். 10 நிமிடம் வரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் விபரமறிந்து அங்கு வந்த ஒ.ஜ.சி அங்கஜனை யாழ்ப்பாணம் வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதே தனக்கான மேலிடத்து உத்தரவு எனவும் தானே எம்முடன் வருவதாக கூறி உடனேயே புறப்பட அவரது வாகனம் ( ஜீப் ) முன்னே செல்ல ஏ9 வீதியில் யாழ்ப்பாணத்தை நோக்கி எமது 3 வாகனங்களும் அவரை தொடர்ந்தன.

அந்த ஏ9 வீதியில் ஒர் இடத்தில் வீதியின் இரு மருங்கிலும் வேட்பாளர் சர்வாவின் காரியலாயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதை தாண்டி யாழ்ப்பாணத்தை நோக்கியே சவகச்சேரி பொலீஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனால் சர்வாவின் வகன தரிப்பிடத்திற்கு முன்னால் சவகச்சேரி பொலீஸீன் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு அப்பால் 200 சர்வாவின் ஆதாரவாளர்கள் நின்றிருந்தார்கள். இந்த நிலையில் எமது பாதுகாப்பிற்காக வந்த கொடிகாமப் பொலீஸ் ஜீப் ஆனது நேராக போய் சர்வாவின் காரியலாயத்திற்கு முன் திடீரேன நின்றது , அதை சற்றும் எதிர்பாராத நாம் எங்களுடைய வாகனங்களையும் அதற்கு பின்னால் நிறுத்தவேண்டியதாயிற்று. தாம் வாகனத்தை நிறுத்தியது பற்றி கொடிகாமம் பொலீஸ் அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிடும் போது தன்னால் அதற்கு அப்பால் செல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவணிக்கவேண்டியதொன்று.

எங்ககளுடைய வாகனம் நிற்கவும் சர்வாவின் ஆட்கள் எம்மை நோக்கி கும்பலாக கல்லு தடி பொல்லுகளுடன் எம்மை தாக்கும் நோக்கோடு ஓடி வந்தார்கள். தனது பேட்டியில் ”பெடியள் குழம்பிபோய் நிண்டாங்கள் என்றும் அவர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும்” சம்பவம் நடந்த அன்று கொடுத்த பேட்டியில் சர்வாவே குறிப்பிட்டிருந்தது இதைத்தான். எனது வாகனத்தை கும்பல் சுழ்ந்து கொண்டால் வாகனத்திற்குள் இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த நானும் அப்பாவும் கதவை திறந்து கொண்டு வெளியேற முற்பட்ட வேளை தீடிரென்று இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டன. சட்டென எங்கள் இருவரையும் தள்ளி உள்ளே எற்றி என்னுடைய மெய்ப்பாதுகாவலர் திஸ்ஸா நாயக்க தானும் ஏறிக்கொண்டு உடனேயே எங்கள் வாகனத்தை வேகமாக எடுத்து செல்ல வேகமாக அவ்விடத்திலிருந்து மின்னலென புறப்பட்டோம் அவ்விடத்தை விட்டு நாம் தப்பிய கணப்பொழுதில் எனது மெய்பாதுகாவலர் குண்டடிபட்டுள்ளது தெரியவந்தது அவரை சிசிசைக்காக வைத்தியசாலை சேர்பித்துவிட்டு உடனேயே முறைப்பாடு செய்வதற்காக யாழ் பொலிஸ் நிலைய சென்றோம்.

மேற்கொண்டு நடந்தவை அனைவருக்கும் தெரியும், அதில் மறைக்கப்பட்ட , மாற்றப்பட்ட நிகழ்வுகள், கூற்றுகள், தொடர்பிலான சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

சம்பவம் தொடர்பிலான மாற்றப்பட்டவை , மறைக்கப்பட்டவை தொடர்பிலான சந்தேகங்கள் –

சர்வா தொடர்பான கேள்விகள்

  • பிற்பகல் எம்மோடு முரண்பட்டதாக சொல்லியிருக்கும் சர்வா அது தொடர்பில் ஏங்காவது முறைப்பாடு செய்திந்தாரா இல்லை யாருக்காக தெரியபடுத்தியிருந்தாரா ?
  • • தன் ஆதரவாளார்களிடையே கொந்தளிப்பு நிலவுவதாகவும் , கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாட்டு சூழல் இருப்பதும் தெரியவந்திருந்தால் சக வேட்பாளனாக என்னை ஏன் அவர் தொடர்கொள்ளாவில்லை ?
  • எம்மை பின் தொடர்ந்து எமது பணிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தது ஏன் , அதை அவரால் மறுக்க முடியுமா ?
  • அத்தோடு மதியமும் முரண்பட்டு இருக்கின்றோம் என்றும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒரே கட்சியில் போட்டியிடும் சக வேட்பாளன் என்ற ரீதியிலாவது எனக்கு உடனே தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர் அதைச் செய்யவில்லை…?
  • தம்மை அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு ஜனநாயவாதி என்று சொல்லிக் கொள்ளூம் சர்வா ஆயுததாரிகளின் ஆதரவுடன் திரிவது ஏன்?
  • சர்வா ‘ எங்கட பெடியள் குழம்பிப் போயிருந்தாங்கள்…’ என்றும், தாம், தமது அலுவலகத்திற்கு முன்னால் கூட்டமாக நின்றிருந்ததாகவும் சொல்லியுள்ளார். இதிலிருந்து எம்முடன் ஏதோ பிரச்சனை ஏற்படுத்த அவர்கள் திட்டமிடல் இல்லாமலா ?

பொலிசார் மீதான சந்தேகங்கள்.

  • சர்வாவின் அலுவலம் முன் வாகனத்தை நிறுத்த வேண்டியதன் நோக்கம் என்ன ?
  • சர்வாவின் காரியாலத்திற்கு முன்னால் இப்படியான ஒரு சூழல் நிலவுவதாக தெரிந்திருந்தும் எம்மை அவ்வழியால் அழைத்துச் வந்தது ஏன் ?
  • எமக்கு பயணத்திற்கான மாற்றுப்பாதை தெரிந்திருக்கவில்லை. அப்படி ஏதும் மாற்றுப்பாதைகள் இருப்பின், நாம் பாதுகாப்புக்கு அழைத்த கொடிகாமம் பொலீசார், எம்மை மாற்றுப்பாதையின் ஊடாக அழைத்து வந்திருக்கலாமே.. ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை.
  • சாவகச்சேரி பொலிஸ் அதிகாரி வாக்கு மூலம் அளிக்கும் போது ‘தான் எப்பிரச்சனையும் இடம்பெறக் கூடாது என்று சர்வானந்தவையும் அவரின் ஆதாரவாளர்களையும் தான் ஒரு இடத்திற்குள் கட்டுக்குள் வைத்திருந்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார். ஆனால் சர்வானந்தன் வாக்கு மூலம் கொடுக்கும் போது ‘எனது தந்தையார் அவரை அழைத்ததாகவும் தான் வெளியே வந்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கொன்று முரணான கூற்று பொலிசாரின் பொய் தெரிகிறது.
  • ஒரு வேடிக்கையான விடயம் சம்பவ இடத்தில் கொடிகாம பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க, சவகச்சேரி பொலிஸ் அதிகாரி ஜ.பி. ராஜசிங்க ஆகியோர் நின்றிருந்தனர். நீதிமன்றில் குறிப்பிடும்போது தாங்கள் அவ்விடத்தில் நின்றோம் ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை வெடிச்சத்தம் மட்டுமே கேட்டது என பொறுப்பற்ற முறையில் கூறுவது அவர்களின் நேர்மையற்றதன்மை தெளிவாகிறது.
  • சர்வாவின் சில சாட்சிகளின் அடிப்படையில் என்னுடைய தந்தையை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிஸ் என்னுடைய தரப்பு முறைப்பாட்டினது சாட்சிகளையும் வைத்து சர்வாவை இன்னும் ஏன் கைது செய்யவில்லை ?

எனது ஐயங்களும் விளக்கங்களும்

 

  • இப்படியான ஒரு அவதூறு எனக்கு நிச்சப்பட்டிருக்கும் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்ற அடிப்படை கூட அறியாதவன் அல்ல நான்.
  • தாக்குதல் நடாத்தும் எண்ணம் எமக்கிருந்திருந்தால், பொலீசை அழைத்து வந்திருக்கவேண்டிய தேவை என்ன ?
  • என் மீதான தாக்குதலிற்கு அவர்கள் திட்டமிடமலா எனது மெய்ப்பாதுகாலவர் காயப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து தாக்குதல் நடாத்தப்படாமல் எப்படி இந்தக் காயம் வந்திருக்க முடியும்.?
  • சர்வாவுடன் முரண்படும் நோக்கமிருந்திருந்தால் வெறும் 15 பேருடன் போய் மாட்டிருக்க மாட்டேன்.
  • எம் மீதான நடத்தப்பட்டிருந்த தாக்குதலின் அதிர்ச்சியிருந்து நாம் மீள முன்னரே நாம் அவர்களை தாக்கி விட்டதான செய்தியை பரவ விட்டதன் மூலம் தெரிகிறது இதை முன்கூட்டியே திட்டமிட்டு விட்டார்கள் என்று.

இவற்றைத் தாண்டி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரம் .

கடந்த நான்கு வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்களாதரவை யாழ் மாவட்டத்தில் கட்டியெழுப்ப நான் உழைத்த உழைப்பில் எந்தவிதமான ஒரு பங்களிப்பும் இல்லாமல் , இடைநடுவில் உள்ளே மழைக்கால காளான்களாக உள்ளே வந்தவர்களால் இதுவரையில் இவர்கள் மக்களுக்காக செய்தவை என்று சொல்லிக் கொள்ள எவையுமில்லை. அதே வேளை ஆளும் கட்சி அரசியல்வாதியாக ஒரு குறுகிய காலத்தில் நான் இத்துணை மக்கள் ஆதரவை பெற்றிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை . இதற்காவே கட்சி பேதமின்றி திட்டமிட்டு இப்படியான அவதூறு செய்திகளை பரவி விட்டு என்னை ஒரு அடாவடி அரசியல்வாதியாக காட்டிவிட வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். எதிவரும் தேர்தலில் கிடைக்கவிருக்கும் என் வெற்றியை தடுக்க கங்கணம் கட்டி செயற்படுகிறார்கள். இவர்களினால் வைக்கப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளின் என் தந்தை குறிவைத்திருக்கிறார்கள் . என் மீது நம்பிக்கையும் அன்பும் , விசுவாசமும் வைத்திருக்கும் மக்கள் என்னைப்பற்றி சொன்னால் நம்ம மாட்டார்கள் என்று தெரிந்த இந்த சதிகார கும்பல் என் தந்தை தாக்குதவதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயலுகிறது.

என்னுடைய செயளாளராக இருந்து கடந்த நான்கு வருடங்களின் என் தந்தை செய்த பணியும் , அதன் ஊடாக அடைந்த என் அரசியல் வளர்ச்சியையும் நன்கு இனங்கண்டுள்ள கும்பல் அவரை என்னிடமிருந்து பிரிக்க முற்படுகிறது. அதன் ஊடாக என்னை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்குவதற்கு உட்படுத்தி என் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் மக்கள் ஆதரவு செயற்பாட்டை தடுக்க முயல்கிறது.

ஆளும் கட்சியிலிருக்கிறேன் ஆனால் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை. என் தந்தை மீதான குற்றச்சாடை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அவர் குற்றமற்றவர் என்பதை எல்லோருக்கும் நிரூபிப்பேன். நான் வெளிப்படையானவன் இதுவரையின் என்னை குறை சொல்ல ஏதுமற்ற சூழ்ச்சிக்காரர் என் தந்தை வரும் தேர்த்தல் காலங்களிற்க்கு மட்டுமாவது என் செயற்பாடுகளிலிருந்து தள்ளி வைப்பதன் மூலம் என் தேர்தல் வெற்றியை தடுத்து விடலாம் என்றும் அதற்கப்பால் என் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாவிடும் என்று கனவு காண்கிறார்.

மக்களுக்காக ஒன்று சொல்ல விளைகிறேன். நல்லது கெட்டது தெரிந்தவர்கள் நீங்கள் . என் மீதும் , என் தந்தை மீதும் பழி சொல்பர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் , அவர்களது கடந்த கால வாழ்கையை பாருங்கள், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் வாழுகிறவர்களாலோ இல்லை , மக்களுக்கா வேலை செய்தவர்களாலோ என் மீது சேறு இறைக்கப்படவில்லை. மாறாக வேவ்வேறு தரப்பிலிருந்தாலும் இனம் இனத்தோடு சேரும் என்பதற்கிணங்க கூட்டு களவாணிகள் போல் செயற்படும் இவர்களின் நடவடிக்கைகளை நம்புகிறீர்களா ? என்னுடைய நேர்மையான அரசியலை மக்கள் அங்கீகரிப்பார்கள் அப்போ இவர்கள் இருந்த இடம் இல்லாமல் போய்விடுவோம் என்ற பயம் இவர்களை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது.

என்னையும் தங்களில் ஒருவனாக காண்பித்து மக்கள் மீது அரசியல் மீது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நம்பிக்கையை அடிபடச் செய்து தாம் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கிறார்கள்.

இதுவரையில் :

  • கடந்த நான்கு வருடங்களில் நான் யாருடனும் மோதல் போக்கை கடைப்பிடித்திருக்கவில்லை.
  • அரசியல்வாதிகள் பயணிக்கும் பாதை வேறு வேறாயினும் மக்களுக்கான சேவை என்ற பொது நோக்கில் பயணிக்க வந்திருக்கிறோம் என்றால் எம்மிடையே மோதல் ஏன் என்ற நிலைப்பாடுள்ளவன் நான்.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் நான் நடந்த பாதையை கவனித்த எனது செய்ப்பாடுகளையும் ,நடவடிகைகளையும் அவதானித்த மக்கள் எனைப்பற்றி நன்கறிவர்.
  • அண்மையில் சாவகச்சேரியில் எமது ஆதரவாளர் ஒருவர் கூட்டமைப்பு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது தொடர்பில் நான் நடந்து கொண்ட முறை ஒரு சின்ன உதாரணம்.
  • ஆயுதக்கலாச்சாரம் , அடிதடி அரசியலில் நம்பிக்கை இல்லாதவன். அது மக்கள் விரோதமான செயல் என்பதிலும் அதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் நான்கு ஆண்டுகளாக நான் மக்களின் மனதில் இருப்பவன் என்பதனால் உணர்ந்து கொண்டவன்.
  •   எனது கடந்த நாலு வருட மக்களுக்கான சேவை எனக்கு தேடித் தந்திருக்கும் வெற்றி வாய்பை இப்படியொரு நிகழ்வு பற்றிய பொய்யான குற்றச்சாடு பாதிக்கும் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
  • காட்டிக்கொடுப்பு அரசியல் செய்யாதவன் , எனது சுயநத்திற்காக அரசியல் செல்வாக்கை பயன்படுத்தாதவன், பாதகர் வழியில் செல்லவில்லை என்பதற்காக கிடைத்த பரிசு இந்த பழிச்சொல்.

அன்புக்கினிய மக்களே,

கடந்த நான்கு வருடங்கள் மக்களோடு மக்களாக நின்றதற்கு எனக்கு மக்கள் விரோத சக்திகளால் வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரமாக பார்க்கிறேன் இதை. மக்களுக்கான எமது பணி சரியான பதையில் பயணிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும் நான் உங்களை விட்டு விலகப் போகின்றவன் இல்லை. நான் இடைவிலகலுக்காக அரசியலுக்கு வந்தவனும் இல்லை.

மக்களே நீங்கள் என்னை எப்போதும் போலவே இனியும் நம்பலாம். உங்களின் நம்பிக்கையே எனது பாதை. நான் மக்கள் பணிக்காகவே இங்கு மக்களோடு இருப்பவன். என்னை மக்கள் அங்கீகரிப்பார்கள் அதற்கான ஆணை இந்த தேர்தலின் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதன் பின்னும் என் பணி தடையின்றித் தொடரும் இனி வரும் காலங்களில் இது போன்ற வீணர்களின் பழிக்கு ஆளாகாமல் செயற்படுவேன் உறுதிபட தெரிவிக்கின்றேன்.

ஊடக நண்பர்களே, மக்களையும் என்னையும் இணைக்கும் பாலமாக நீங்கள் செயற்பட்டு வருகின்றீர்கள். அதற்காக நன்றியுணர்வுள்ளவனாக நான் இருக்கின்றேன்.

சட்டம் தனது கடமையை செய்யட்டும். அதற்கு ஒரு போதும் தடையாக இருந்ததில்லை , இருக்கப்பொவதுமில்லை. சட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

என்னோடு இருக்கும் மக்கள் எனக்கு துணையாக நம்பிக்கையுடன் இருக்கும் வரை எனக்கு என் அரசியல் பயணத்தில் ஏற்படுத்தப்படும் எந்த தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேற முடியும் என்னால்.
நன்றி.

என்று தனது உரையில் மேலும் அவர் தெரிவித்திருந்தார்

Related Posts