எனது மாமனாரைத் துப்பாக்கியால் வாய்க்குள் சுட்டுக் கொலை செய்து விட்டு எனது 14 வயது மகளை விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு சென்றார்கள் எனக் காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 4 ஆம் நாள் அமர்வு யாழ். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அங்கு சாட்சியமளிக்கும் போது, எனது மகள் சிவஞானசோதிலிங்கம் ஜெயபாலினி (வயது 14) முள்ளிவாய்க்கால் பொக்கனப் பகுதியில் குடும்பத்தினருடன் இருக்கும் போது வலுக்கட்டாயமாக விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்றார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி நாங்கள் பொக்கனப் பகுதியில் ஒரு தரப்பால் போடப்பட்ட பங்கரில் இருந்தோம்.அப்போது அந்தப் பகுதிக்கு வந்த விடுதலைப் புலிகள் எமது பிள்ளையைப் பிடிக்கும் போது நாங்கள் கத்தி குளறினோம்.அப்போது எனது மாமாவின் வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டார்கள். அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
பின்னர் எனது 14 வயது மகளை இழுத்துச் சென்றார்கள். நாங்கள் கத்தக் கத்த எனது மகளை விட வில்லை.
இதேபோன்று 1998 ஆம் ஆண்டு எனதுமூத்த பிள்ளையையும் பிடித்துக்கொண்டு சென்று விட்டு பின்னர் உயிரிழந்துவிட்டார் என்று ஒரு கல்லைக் கொண்டு வந்து தந்தார்கள்.அப்படி ஒரு கொடூரமான வேலையை விடுதலைப் புலிகள் செய்து எனது மகளைப் பிடித்துச் சென்றார்கள்.நாங்கள் எல்லா இடமும் தேடிப் பார்த்தும் மகளைக் காணவில்லை.
பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளோம்.ஆனால் இதுவரையில் எனது மகளைக் காணவில்லை.
அவர் உயிருடன் இருக்கின்றார் என்று தான் நாங்கள் நம்புகின்றோம். கோவிலுக்குச் சென்று காசு போட்டுப் பார்த்தால் மகள் உயிருடன் இருக்கின்றதாகப் பூசகர்கள் சொல்கின்றார்கள்.
எனது பிள்ளை உயிருடன் இருக்கின்றார் . நீங்கள் எனது பிள்ளையைக் கண்டு பிடித்துத் தாருங்கள் என ஆணைக்குழுவிடம் கேட்டார்.
மேலதிகமான விசாரணைக்குட்படுத்துவதாகவும், ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொள்வார்கள் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.