Ad Widget

எனது மரணச் சான்றிதழை தாருங்கள்; அரச அதிபரிடம் கோரிய பெண்மணி

“எனது மரணச் சான்றிதழை எனக்குப் பெற்றுத் தாருங்கள்” என்று உயிருடன் உள்ள ஒருவர் தன்னிடம் வந்து கோரியதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இந்த விநோதக் கோரிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;கொக்குவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலத்துக்கு முன்னர் சுவிஸ் சென்றுள்ளார். தற்போது அவர் தனது 6 பிள்ளைகளுடன் இங்குள்ள தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த உறவினர்கள் அந்தக் காணி குறித்த பெண்மணியின் பெயரில் இல்லை என்று சொல்லி அவரை விரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் பெண்மணி தீர விசாரித்த போது, பெண்ணின் வீட்டுக்குரிய காணியை வைத்து வங்கியில் கடன் எடுக்கப்பட்ட விடயம் தெரிய வந்தது. அத்துடன் அந்தப் பெண்மணியின் பெயரில் உள்ள காணி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டமையும் கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த பெண் 1991 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் அவரது உடல் கொக்குவில் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் அவரது தந்தையார் தகவல் வழங்கியதாகத் தெரிவித்துப் போலி மரணச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போலி மரணச் சான்றிதழின் பிரகாரமே காணி உறுதி மாற்றப்பட்டு வங்கியில் கடன்பெறுவதற்காக, ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுவிஸிலிருந்து திரும்பிய குறித்த பெண் வங்கியில் உள்ள தனது மரணச் சான்றிதழைப் பெற்றுத் தருமாறு தன்னிடம் கோரியதாக அரச அதிபர் தெரிவித்தார். அத்துடன் குறித்த மரணச் சான்றிதழை மாவட்ட செயலகம் வழங்கவில்லை எனவும் போலிக் கச்சேரி நடத்துவோரே அதைத் தயாரித்து வழங்கியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

Related Posts