Ad Widget

எந்தெந்த நேரங்களில் மின் வெட்டப்படும் ; வலயங்களாக பிரிப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் எற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக இன்று முதல் மூன்றரை மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. குறித்த மின் தடை கொழும்பு நகரத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலுக்கு வருவதாக மின்சாரசபை மேலும் கூறியுள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரையே இவ் மின்தடை அமுலில் இருக்கும். நாடுமுழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் குறித்த மின்வெட்டு அமுல் படத்தப்படவுள்ளது. காலை 08 மணியிலிருந்து பிற்பகல் ஆறு மணி வரையான காலப்பகுதில் இரண்டரை மணித்தியால மின்வெட்டும், பிற்பகல் ஆறு மணியிலிருந்து இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலய மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி ஏ வலயத்திலுள்ள பிரதேசங்களுக்கு முற்பகல் 8 மணி தொடக்கம் 10.30 மணி வரையான காலப்பகுதியிலும் பிற்பகல் 6 மணியிலிருந்து 7 மணி வரையிலும், பி வலயத்திலுள்ள பிரதேசங்களில் காலை 10 மணி தொடக்கம் ஒரு மணி வரையான காலப்பகுதியிலும் பிற்பகல் 7 மணியிலிருந்து 8 மணி வரையிலும், சி வலயத்திலுள்ள பிரதேசங்களில் மாலை 1 மணி தொடக்கம் 03.30 மணி வரையான காலப்பகுதியிலும் பிற்பகல் 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும், டி வலயத்திலுள்ள பிரதேசங்களில் மாலை 03.30 மணி தொடக்கம் 06.30 மணி வரையான காலப்பகுதியிலும் பிற்பகல் 9 மணியிலிருந்து 10 மணி வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதிக்குள் மருத்துவமனைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மற்றும் பிரதான தொழிற்சாலைகளில் மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் கருவிகள் செயலிழந்து போயிருந்தன.

தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும் குழாய் உள்ளிட்ட முக்கிய உற்பத்தித் தொகுதி பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க சில நாட்கள் செல்லும் என்று கருதப்படுகின்றது. இதன் காரணமாக நாளாந்த மின்பாவனைக்கு நுரைச்சோலையில் இருந்து வழங்கப்பட்ட 900 மெகாவொட் மின்சாரத்தின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு தவிர வேறு வழியே இல்லாத நெருக்கடிக்கு மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. எனவே இன்று தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

மேலும் தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினை அண்டிய பிரதேசங்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யவென மூன்று பேர் அடங்கிய தொழில்நுட்ப குழு விரைந்துள்ளனர் எனவும் மின் சக்தி அமைச்சு அறிவித்திருந்தது. அத்தோடு குறித்த காலப்பகுதியில் மக்கள் மின்சாரத்தை அவதானமானவும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts