Ad Widget

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: புதிய அரசாங்கம் அமைப்போம் – மஹிந்த முழக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கவென அனைத்து மக்களையும் 2015இல் தங்களுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தங்களோடு இணைத்து கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தமது ஆட்சி காலத்தில் குரோதம், பழிவாங்கல் போன்றவை குப்பையில் போடப்பட்ட நிலையில் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதனை மீண்டும் எடுத்து செயற்படுத்தி வருவதாகவும் மாற்று சிந்தனை உள்ள அரசியல் சக்திகளை சிறையில் அடைத்து வருவதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி 1989, 1990 காலத்தில் செய்த அநியாயங்களை மறக்க முடியாது என்றும் புலிகள் அமைப்புடன் 11 வருடங்களுக்கு முன்னர் செய்து கொண்ட நாட்டை காட்டிக் கொடுக்கும் பிளவுபடுத்தும் ஒப்பந்தத்தை மறக்க முடியாது என்றும் இவை தற்போதுள்ள இளைய சமுகத்திற்கு தெரியாது என்றும் பழையவர்களுக்கு அனுபவம் உண்டு என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 9ம் திகதி மக்கள் ஆணையை மதித்து தான் விலகிச் சென்ற விதம் இலங்கை அரசியல் வரலாற்றுக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் சர்வதேச நாடுகளும் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாட்டு விரோத செயற்பாடுகள் காரணமாகவே வாசுதேவ உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து ஜெனீவா சென்று குரல் எழுப்பியதாகவும் பேரணி, ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

9ம் திகதி மக்கள் ஆணையை மதித்து மெமுலன வீட்டிற்கு வெறும் கையுடன் சென்ற தான் மக்கள் மனங்களை வென்றுசென்றதாகவும் அதனால்தான் தன்னை மீண்டும் அழைக்க நுகேகொடவில் ஆரம்பித்த அலை இன்று மெதமுலனவரை வந்து தன்னை அழைத்து நிற்பதாகவும் இந்த மக்களின் அழைப்பை புறக்கணிக்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சி காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக மூலதர்மங்களை மதித்து நடந்ததாகவும் நீதிமன்றை அவதூறு செய்த அமைச்சர்கள் சிறைக்கு சென்றதாகவும் ஆனால் இன்று நீதிமன்றை பலரும் அவதூறு கூறுவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை ஜனவரி 11ம் திகதி தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும் ஆனால் தனக்கு அப்பதவியை பெற சுமார் 7 மாதங்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சிக்கலில் விழுந்துள்ளதாகவும் அமெரிக்காவின் எச்சரிக்கையை கணக்கிலெடுக்காது ஐதேக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதலில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்திருந்தால் உலகத்தில் அதைவிட வெட்கம் வேறு எதுவும் இல்லை என்றும் மஹிந்த கூறினார்.

100 நாட்களில் 27 எத்தனோல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 5400 கோடி மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆட்சி காலத்தில் விமான நிலைய திறப்பு, துறைமுக திறப்பு, அதிவேக வீதி திறப்பு என அபிவிருத்தி செய்திகளுக்கு பஞ்சமிருக்கவில்லை என்றும் ஆனால் தற்போதைய அரசாங்கம் தனது திட்டங்களை பதாகை மாற்றி திறந்து வைப்பதாகவும் சிலவற்றை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது ஆட்சி காலத்தில் நடந்த அபிவிருத்தியை பார்த்து இலங்கை மக்கள் பெருமை கொண்டனர். வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் திரும்பு வந்தனர். கொழும்பு நகர் துரித அபிவிருத்தி நகராக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய அரசாங்கம் அனைத்தையும் தங்கள் திட்டம் என கூற முனைகிறது.

எனவே இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பு அபிவிருத்தியை மையமாக வைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், பேர்கர், மலே ஆகிய அனைத்து இன மக்களும் ஒரு இனமாக சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் தேசியக் கொடியை தலைநிமிரச் செய்ய எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கு அனைவரும் தங்கள் அணியுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts