Ad Widget

எங்கள் பிரச்சினைகள் எதுவாகினும் பேசித் தீர்ப்போம்! ஜனாதிபதி மைத்திரி கிளிநொச்சியில் அழைப்பு!!

“எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுடன் நல்ல நட்பாக உள்ளன என்பதுடன் எம்முடன் இணைந்தும் செயற்படுகின்றன. எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம். இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்கவேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப் பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithri- kilinochchi-my3-sena

மைத்திரி ஆட்சி – நிலையான நாடு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட ‘உணவுப் பாதுகாப்பும் நிலையான விவசாயமும்’ என்ற எண்ணக் கருவை நடைமுறைப்படுத்தும் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு அருகில் நேற்று நடைபெற்றது.

இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்று உலகத்தில் எல்லோரும் எங்களுடன் நல்ல நண்பர்களாக உள்ளதுடன் எம்முடன் சேர்ந்து செயற்படுகின்றனர். எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை எதிராக செயற்படுகின்றவர்களும் இல்லை. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா, யப்பான் என எல்லோரும் எங்களுடன் இருக்கின்றார்கள். எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம்.

இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்க வேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப் பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். வடக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் முக்கியமான சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் நான் கூறுகின்றேன். நாங்கள் அனைவரும் ஆக்கபூர்வமான பேச்சுகளை மேற்கொண்டு எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் ஒற்றுமையாக – சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.

எங்களுடைய நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் தங்களுடைய உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன. வறுமையை இலங்கையில் இல்லாதொழிக்கும் நோக்கில் பயிரிடக்கூடிய அனைத்து நிலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு பயிர்செய்கைக்கு பயன்படுத்தாது வெறுமையாக உள்ள அரச மற்றும் தனியார் நிலங்கள் அரசினால் மீளப்பெறப்பட்டு அவை உற்பத்தியில் ஈடுபடக்கூடியவர்களுக்கு வழங்கப்படும். எனவே, இதுவரை காலமும் வெறுமையாக வைத்திருந்த நிலங்களை உற்பத்திக்கு பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை எம்மால் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் வருடந்தோறும் பல கோடி ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏற்றுமதி இறக்குமதி துறையில் இலங்கை மிக மோசமான நிலையில் இருக்கின்றது.

2004ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதற்காக 6000 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வருடந்தோறும் பல கோடிக்கணகில் இறக்குமதிக்கு செலவு செய்தால் எங்களுடைய விவசாயிகள் எவ்வாறு முன்னேற்றம் அடைவார்கள்? அவர்களின் ஏழ்மை எவ்வாறு இல்லாது போகும்?

எனவே, எம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதனை தவிர்த்து அதனை இங்கேயே உற்பத்தி செய்ய அனைவரும் முன்வரவேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் இறக்குமதி செய்வதனை தடைசெய்யவுள்ளோம்.

இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான இலக்கு இந்த நாட்டிலிருந்து ஏழ்மையை இல்லாதொழிப்பதே. இன்று இந்த வேலைத்திட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் சம காலத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இந்தத் தேசிய வேலைத்திட்டத்தை எல்லா மாகாண சபைகளும் பொறுப்பெடுத்து செயற்படுத்துமாறு கோருகின்றேன்” – என்றார்.

Related Posts