Ad Widget

எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் கண்ணீர் மல்க காக்கா அண்ணா விடுத்துள்ள கோரிக்கை!!

தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பாதீர்கள். எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் நேற்று வியாழக்கிழமை(10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்தவரும், மாவீரர் அறவிழியின் தந்தையாருமான முத்துக்குமார் மனோகர் (காக்கா அண்ணா) மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு விடயத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றுக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுவரும் நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இவ்வாறு அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இழப்பைச் சந்தித்த தமிழ்மக்கள் ஒரே உணர்வுடன் உள்ளனர். இதனைச் சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் சந்தித்து இது குறித்துக் கலந்துரையாடவுள்ளோம்.

எங்களுக்குரிய காலக் கடமையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்கினார்கள்.

ஆணைக்குழுவினூடாகச் சொல்லப்படும் கருத்துக்களை எந்தளவிற்கு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

ஆனால், நாங்கள் பூஸாவிற்குள் இருக்கும் போது எங்களுக்கான கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினோம். எங்களுக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொடுத்தோம். அதனால் எங்களுக்கு எந்தப் பயனுமில்லை.

அதில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்ட போதும், முக்கியமாக அன்றைய காலகட்டத்தில் துயிலும் இல்லங்களுக்கு கால்பதிக்க முடியாது. எனினும், எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை வேண்டும் என நான் குறிப்பிட்டிருந்தேன்.

என்னுடைய மகள் மட்டும் அதில் புதைக்கப்படவில்லை. ஏதோ ஒரு விதத்தில் இன்று துயிலும் இல்லம் போகக்கூடியதாக உள்ளது. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக மட்டுமல்லாமல் தற்போதைய நிலைமைக்காகவும் சேர்த்து அழ வேண்டும்.

தற்பொழுதைய செயற்பாடு எமது உரிமையைத் தட்டிப்பறிக்கும் செயற்பாடாகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts