கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று வட. மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுகூறல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட ஆகியோரது விசாரணைகள் பூரணப்படுத்தப்படாது நிற்கின்ற அதேவேளை, அந்தவரிசையில் தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகள் கண்டுக்கொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது.
எனவே, படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரிப்பதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழுவின் விசாரணையின் மூலம் குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.