Ad Widget

ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோரும் டக்ளஸின் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அந்த நேரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு நீதியை கோருவது வேடிக்கையான விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வடக்கு கிழக்கில் பல ஊடகவியலாளர்கள் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுவதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அந்த சந்தர்ப்பத்தில் டக்ளஸ் தேவானந்தா தவறியிருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட ஆகியோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைப் போல் ஏனைய படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts