Ad Widget

‘உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துக’ ஜனாதிபதி உத்தரவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, மேலதிக தாமதங்களின்றி நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இது குறித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரருக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், சில விடயங்களைத் திருத்துமுகமாக, உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தும் தற்போதைய சட்டத்தில், சில உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, தற்போதைய சட்டத்தில் காணப்படும் 50 குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதோடு, அவை திருத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய சட்டத்தில் காணப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

முன்னைய எல்லை மீள்நிர்ணயத்தில் காணப்பட்ட தவறுகளைத் திருத்தும் முகமாக, தேர்தல் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை ஏற்கெனவே, வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் முஸ்தபா, குறித்த வர்த்தமானி அறிவித்தலை, அச்சுத் திணைக்களத்தில் பணியாற்றும் எவரும் பார்க்க முடியுமெனத் தெரிவித்தார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts