Ad Widget

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெப்ரவரி 10!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

248 உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணமும் வேட்புமனுவும் பொறுப்பேற்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அத்துடன் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதுஃ

248 உள்ளூராட்சி சபைகளுக்கு கீழ் 17 மாநகர சபைகளுக்கும், 23 நகர சபைகளுக்கும், 208 பிரதேச சபைகளுக்குமாக இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதலாம் கட்டப் பணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்துதல், வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

21 மாவட்டங்களில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

7 மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகளுக்காக முதல் கட்டப் பணிகள் இதன் கீழ் இடம்பெற்றன.

30 அரசியல் கட்சிகளும் 49 சுயேச்சைக் குழுக்களும் முதல் கட்டமாக வேட்புமனுக்களை கையளித்தன.

வேட்புமனுக்களை ஏற்கும்பணிகள் இரண்டு கட்டமாக இடம்பெறுகின்ற போதும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related Posts